பரபரப்பான அரசியல் சூழலில்! இடதுசாரிகள், விசிகவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இரு முறை ஆளுநரை சந்தித்தும் ஆட்சி அமைக்க அழைக்காத பட்சத்தில் இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியோருடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.
தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களை சேர்த்தால் 112 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

இதற்கான ஆதரவு கடிதத்தை ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கொடுத்திருந்தார். இதை வைத்து தன்னை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என கருதப்பட்ட நிலையில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைக்கவே இல்லை. இதனால் ஆளுநர் இன்றைய தினம் விஜய் மீண்டும் ஒரு முறை சந்தித்து பேசினார்.
சுமார் 45 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், விஜய்யிடம் ஆளுநர் ஏராளமான கேள்விகளை கேட்டாராம். அதாவது 112 பேரின் ஆதரவை வைத்துள்ளீர்கள், பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள்? ஆட்சி அமைந்தால் கவிழாது என்பதற்கு உத்தரவாதம் கொடுக்க முடியுமா என கேள்விகளை ஆளுநர் கேட்டதாக சொல்லப்படுகிறது.
இதற்கு விஜய் 112 பேரின் கடிதங்தகள் உள்ளன. மேலும் இடது சாரிகள், விசிகவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அங்கிருந்து 6 பேர் நிச்சயம் ஆதரவு அளிப்பார்கள் என்றாராம். இதை எப்படி வாய் வார்த்தையாக ஏற்க முடியும், அந்த 6 பேரின் கடிதம் இருந்தால்தானே அது அதிகாரப்பூர்வமாமானதாகும் என ஆளுநர் சொல்லிவிட்டார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதா வேண்டாமா என்பது குறித்து நாளைதான் இடதுசாரிகளும் விசிகவும் முடிவு செய்கிறதாம். விஜய்யால் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்திற்கு இடதுசாரிகளை சேர்ந்த சண்முகம், வீரபாண்டியன், விசிக தலைவர் தொல் திருமாவளவன் ஆகியோர் அழைத்த ஸ்டாலின், மூவருடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்படும் என தெரியவில்லை. ஆனால் ஆட்சி அமைக்க புறவாசல் வழியை தேர்வு செய்யாது என்பது ஸ்டாலின் மீதான நம்பிக்கை. ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக இருப்போம் என ஸ்டாலின் ஏற்கெனவே சொல்லிவிட்ட நிலையில் தற்போது ஸ்டாலின், இடதுசாரிகளுக்கும் விசிகவுக்கும் என்ன ஆலோசனை வழங்குகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications