பெண்களே..சீண்டலா? சட்டுன்னு பஸ்சில் பட்டனை அழுத்தலாம்! சிசிடிவியும் இருக்கு.. தொடங்கி வைத்த முதல்வர்
சென்னை: அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
Recommended Video
பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னையில் 500 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் அமைக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அரசு பேருந்துகள்
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 20,304 பேருந்துகள் 10,417 வழித்தடங்கள் மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பொது போக்குவரத்தை ஒரு கோடியே ஏழு லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தபிறகு பெண்களுக்கான இலவச பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 62 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் பேருந்துகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்காக 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு 2,500 பேருந்துகளில் சிசிடிவி, அவசர அழைப்பு பட்டன்கள் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு வசதிகள் பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

பேருந்துகள் புதிய வசதிகள்
அதன்படி, அரசுப் பேருந்துகளில் 3 சிசிடிவி கேமராக்கள், 4 அவசர அழைப்பு பொத்தான்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்கும் மொபைல் நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம், பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு ஏதும் அச்சுறுத்தல் ஏற்படும்போது, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்கவும், குற்றச்செயல்களை குறைப்பதற்கும் முடியும் எனக் கூறப்படுகிறது.

தொடங்கி வைத்த முதல்வர்
முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் சிசிடிவி கேமரா, அவசர அழைப்பு பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பேருந்துகளில் புதிய வசதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
மேலும், போக்குவரத்து துறையில் 136 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.












Click it and Unblock the Notifications