காவலர்களின் கவலைகளை தீர்ப்பாரா முதலமைச்சர்... பெரும் எதிர்பார்ப்பில் காவல்துறையினர்..!
சென்னை: காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை அதற்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Recommended Video
அதில் தங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் காவல்துறையினர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வரின் அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறை
தமிழக காவல்துறையை பொறுத்தவரை சட்ட ஒழுங்கு, ஊர்க்காவல், ஆயுதப்படை, சிறப்பு படை, உளவுத்துறை, பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு, என பல உட்பிரிவுகள் இயங்கி வருகின்றன. மேலும், காவல்துறை இயக்குநரில் தொடங்கி ஆணையர், ஐஜி, டிஐஜி, எஸ்.பி., டி.எஸ்.பி., காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர், காவலர் என பல்வேறு பணியிடங்களும் உள்ளன. காவல்துறையில் மொத்தமாக 1.25 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

கட்டாயம்
மேற்கண்ட இந்தப் பதவிகளில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு எதிர்பார்ப்புகள் தங்கள் துறை சார்ந்தோ அல்லது தாங்கள் வகிக்கும் பதவியுடன் தொடர்புடையதாகவோ இருக்கும். பொதுமக்கள் எல்லோரும் தங்களின் குறைகளை, புகார்களை தெரிவிப்பதற்காக காவல்துறையினரை அணுகும் போது, அவர்களோ தங்களுக்கான குறைகளையும், புகார்களையும் யாரிடம் சொல்வது எனத் தெரியாமல் மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

தேர்தல் வாக்குறுதி
இதனிடையே சட்டப்பேரவை தேர்தலின் போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் காவல்துறையினருக்கு பல்வேறு வாக்குறுதிகள் தரப்பட்டிருந்தன. காவல்துறையினருக்கு 8 மணி நேரப் பணி, கூடுதல் பணி நேரத்திற்கு ஏற்ப சிறப்பு ஊதியம் வழங்குவது, போலீஸ் கமிஷன் அமைப்பது, காவலர்களின் குறைகளை கேட்டறிய மாவட்ட அளவில் காவல் குறைதீர்ப்பு மையம் அமைப்பது, குறிப்பாக காலதாமதமின்றி பணி உயர்வு வழங்குவது, கருணை அடிப்படையிலான பணிகளை உடனடியாக நிரப்புவது, உள்ளிட்ட 16 வாக்குறுதிகளை திமுக அளித்திருந்தது.

நிறைவேற்றம்
இதேபோல் ஊர்க்காவல் படையின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு அவர்களுக்கான பணி நாட்களும் உயர்த்தப்படும் எனவும் காவலர்களுக்கான மருத்துவப்படி, இடர்காலப்படி உயர்த்தி வழங்குப்படும் என்றும் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தது திமுக. எனவே வரும் திங்கள்கிழமை அன்று இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications