ஸ்டாலின் பி.எஸ்.ஓ.வுக்கே இந்த நிலை... மேடையில் அவசரப்படுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி..!
சென்னை: கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவைக்கு குடியரசுத் தலைவர் வருகை புரிந்ததால் மொத்த பாதுகாப்பு பணிகளையும் டெல்லியே கையில் எடுத்துக்கொண்டது.
டெல்லியில் இருந்து ஏற்கனவே சென்னை வந்த ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் விழா ஏற்பாடுகளையும், பாதுகாப்பு அம்சங்களையும் தெரிந்துகொண்டனர்.
தங்களை மீறி விழா அரங்கிற்குள் அநாவசியமாக யாரும் நுழைய முடியாதபடி கெடுபிடிகள் காட்டத் தொடங்கினர்.

நினைவுப் பரிசு
இந்நிலையில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஆளுநருக்கும், குடியரசுத் தலைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புத்தகத்தையும், மரச்சிற்பத்திலான சட்டப்பேரவையையும் பரிசாக கொடுத்தார். அதை தொடர்ந்து முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு நினைவுப் பரிசை வழங்கினார்.

பி.எஸ்.ஓ.
அப்பாவு கொடுத்த பட்டுசால்வையை வாங்கிய ஸ்டாலின் அதனை பின்னால் நீட்டினார். தனது பாதுகாப்பு அதிகாரி அங்கு இல்லாததை அடுத்து அதனை தனது இருக்கையில் வைத்தார்.. பின்னர் மரத்திலான சட்டப்பேரவை சிற்பத்தை ஸ்டாலினுக்கு அப்பாவு கொடுத்த போது அதை வாங்க வேண்டும் எனக் கூறி ஸ்டாலினின் பி.எஸ்.ஓ. மேடைக்கு ஏறி வந்தார். ஸ்டாலினிடம் இருந்து சால்வையையும், நினைவுப்பரிசையும் வாங்குவதற்குள் அங்கு நின்றிருந்த ராஷ்ட்ரபதி பவன் பாதுகாப்பு அதிகாரி கையில் சைகை காட்டியபடி கம் சார் என்று கூறி தனது கடமையில் கண்ணும் கருத்துமாக நின்றார்.

அவசரம்
முதலமைச்சரின் பி.எஸ்.ஓ.வாக இருந்தாலும் கூட அவரை மேடையிலிருந்து மீண்டும் கீழே அழைத்துச் செல்லும் வகையில், ராஷ்ட்ரபதி பவன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உடன் நின்று கொண்டு அவசரப்படுத்தியதை காண முடிந்தது. ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே விழா மேடையில் அனுமதி தரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உடன்பிறப்புகள்
நிலைமை இப்படியிருக்க சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார உடன்பிறப்புகள் பலரும் ஆர்வக்கோளாறில் கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டி கோட்டையில் குவிந்திருந்தனர். ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீஸாரும், மத்திய பாதுகாப்பு படையினரும் அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications