குறைகளை சொன்னதுமே உடனடியாக அமைச்சர்களுக்கு போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! அரண்டு போன தலைகள்!
சென்னை: கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக 'ஒன் டு ஒன்' கலந்துரையாடல் நடத்தி வரும் ஸ்டாலின், உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்பு கொண்டு பேசி, அவர்களின் கோரிக்கைகளைச் சொல்லி நிறைவேற்றுமாறு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி திமுக தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ஜூன் முதல் வாரத்தி்ல் இருந்து, கழக நிர்வாகிகளை தொகுதிவாரியாக அண்ணா அறிவாலயத்தில் சந்திக்க இருக்கிறேன். அப்போது இன்னும் விரிவாக 'ஒன் டூ ஒன்' பேசுவோம் என்று அறிவித்தார்.

இதையடுத்து, 'உடன்பிறப்பே வா' என்று தலைப்பில் நிர்வாகிகள் சந்திப்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சந்தித்து தங்கள் கருத்துகளைக் கூறினர். திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொருவரிடமும் முதல்வர் கேட்டறிந்து வருகிறார்.
அந்தவகையில் திண்டுக்கல், வேடசந்தூர், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளிடம் அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஆட்சியின் மீது ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் ஆகியோரின் ஆதரவு எப்படி உள்ளது. மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் எனக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அனைவரும் அதில் தாமாகவே முன்வந்து இணைத்து கொள்ளும் அளவிற்கு தாங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், மாணவ- மாணவிகள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களையும், சாதனைகளையும் அவர்களிடம் எடுத்துச் சொல்லி திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை விளக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.
நிர்வாகிகளும், தொண்டர்களும் பொதுமக்களைச் சந்திக்கும்போது, அவர்களிடம் தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி வழியிலும், கடமை கண்ணியம் கட்டுப்பாடு தவறாமல், மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன், உலகத்தால் மனிதன் எனும் வழியில் அணுக வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் சிறப்பாக எடுத்துரைக்க வேண்டும் என்றும் குறிப்பாகப் பெண்களுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணம் திட்டம், புதுமைப் பெண் திட்டம் மற்றும் காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற மக்களின் பேராதரவு பெற்ற திட்டங்களையும், அதன் பலன்களையும் எடுத்துரைக்க வேண்டும் என்றும், இதில் எந்தவித சுணக்கமுமின்றி விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திமுக நிர்வாகிகளுடன் கலந்துரையாடியபோது, முதலில் அவர்களின் சொந்த தொழில், விவசாயப் பணிகள், குடும்ப நிலவரங்கள், அவர்களது வேலைகள் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். இது அவர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், அவர்கள் பகுதிகளில் உள்ள பொதுநல கோரிக்கைகளான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து, உடனடியாக சம்மந்தப்பட்ட அமைச்சர்களை நிர்வாகிகளின் முன்னிலையிலேயே தொடர்புகொண்டு பேசினார். அவர்களது பல கோரிக்கைகளை உடனே நிறைவேற்றியதற்கு நிர்வாகிகள் தங்களது நன்றி தெரிவித்தனர்.
மக்கள் ஆதரவு பெருகப் பெருக பொறுப்பும், கடமையும் கூடுகிறது. எதிர்பார்ப்பு அதிகம் ஆகிறது. அதனைக் காப்பாற்ற நாம் அனைவரும் கடினமாக உழைத்தாக வேண்டும். உழைக்க வேண்டும். அதிகமாக உழைக்க நான் தயாராக இருக்கிறேன். வளர்ச்சி என்பது என்னால் மட்டும் ஆனதல்ல; உங்கள் ஒவ்வொருவரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கையால் வளர்ந்து வரும். இந்த வெற்றியை பெற்றுத்தர நீங்கள் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications