தேர்தல் முடிஞ்சாலும்.. ஓய்வே கிடையாது.. திமுக வேட்பாளர்களை நேரில் அழைத்துப் பேசிய ஸ்டாலின்!
சென்னை: தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் இன்றும் ஓய்வின்றி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த திமுக வேட்பாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு பணிகள் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது. தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 85 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வாக்கு சதவீதம் மிக அதிகம் என்றபோதிலும், கடந்த முறையை விட சுமார் 28 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே கூடுதலாக வாக்களித்துள்ளனர்.

வாக்குப் பதிவு முடிந்த பின்னர், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் இயந்திரங்கள் வைக்கப்பட்டு. ஸ்ட்ராங் ரூம் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள், வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு பணிகள், வெற்றி வாய்ப்பு சூழல் என பல்வேறு விவரங்களை அவர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் 86.11 % வாக்குகள் பதிவாகியுள்ளன. தொகுதியில் மொத்தமுள்ள இரண்டு லட்சத்து 11 ஆயிரத்து 772 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 82 ஆயிரத்து 375 பேர் வாக்களித்துள்ளனர். இந்த தொகுதியில் கடந்த முறை ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 388 வாக்குகள் பதிவான நிலையில் இந்த முறை சுமார் 9 ஆயிரம் வாக்குகள் அதிகரித்துள்ளன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய நாள் இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவாலயம் வருகை தந்தார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் 234 தொகுதிகளின் வேட்பாளர்கள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் வீடியோ கால் வாயிலாக ஆலோசனை நடத்தினார். வாக்குப் பதிவு நாளன்று ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்க உரையாற்றியதுடன், அனைவரின் கருத்தையும், தொகுதி நிலவரம் குறித்தும் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே, தமிழ்நாடு முழுவதும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்று வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் பிறகு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். ஒரு நாள் கூட ஓய்வின்றி சுற்றிச் சுழன்று 234 திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும் ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின்.
இந்நிலையில், தேர்தல் முடிவடைந்துள்ள நிலையிலும் ஓய்வின்றி இன்றும் கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரை வழங்குவதோடு நில்லாமல், தானே இறங்கி, வேட்பாளர்களை அழைத்து அவர் ஆலோசனை நடத்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications