இளைஞர்களுக்கு வழிவிடுவோம்... சீனியர்களுக்கு மரியாதை தருவோம்... திமுக தலைமையின் புது அஜெண்டா..!
சென்னை: இளைஞர்களுக்கு கட்சிப் பதவிகளில் வழிவிட்டு ஒதுங்கும் சீனியர்களுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும் வகையில் புதிய அணி ஒன்றை உருவாக்குவது குறித்து திமுக மேலிடம் ஆலோசித்து வருகிறது.
அறிவுசார் அணி என்ற பெயரில் புதிய பிரிவை தோற்றுவித்து அதில் சீனியர்களுக்கு பதவி கொடுப்பதன் மூலம் இளம் நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூறவும், செயல்பாடுகளை கண்காணிக்கவும் முடியும் என நம்புகிறது.
செப்டம்பர் மாத இறுதியில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

இளைஞர்கள்
திமுகவை தோற்றுவித்ததே கொள்கைச் செறிவும், லட்சிய வேட்கையும் கொண்ட இளைஞர் பட்டாளம் தான். திமுகவை தொடங்கிய போது அண்ணாவுக்கு வயது 40, கருணாநிதிக்கு வயது 25, பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 27. இதேபோல் நாவலர் நெடுஞ்ச்செழியன், மதியழகன், நாஞ்சில் மனோகரன், ஆசைத்தம்பி, என்.வி.நடராசன், என திமுகவில் கோலோச்சிய மிகப்பெரும் தலைவர்கள் அனைவரது வயதும் இருபதுக்கும் முப்பதுக்கும் இடைப்பட்ட காலம் தான்.

அமைச்சரவை
கருணாநிதியை பொறுத்தவரை அரசியலில் அனைத்து நெளிவு சுளிவுகளையும் தெரிந்தவர். இந்த ஊருக்கு இந்தப் பதவிக்கு இவர் தான் பொருத்தமாக இருப்பார் என கோபாலபுரம் இல்லத்தில் அமர்ந்தவாறே நிர்வாகிகள் பட்டியலை தயாரித்துவிடுவார். அவரது கணிப்பும் இதுவரை பொய்த்து போனதில்லை. இப்படித்தான் 1989-ம் ஆண்டு திமுக அமைச்சரவையில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தார். அந்த இளைஞர்களும், புதுமுகங்களும் தான் இன்று திமுகவில் இரண்டாம் கட்டத் தலைவர்களாக வலம் வருகின்றனர்.

திமுக வெற்றி
இதனிடையே தற்போது திமுகவில் இளைஞர் பட்டாளம் அதிகம் இருந்தாலும், பெரும்பாலானோர் எந்தப் பதவியிலும் இல்லாமலேயே இருக்கின்றனர். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றிபெறுவோம் என நம்பிக்கை கொண்டிருந்த ஸ்டாலினுக்கு தேர்தல் முடிவு சற்று ஏமாற்றத்தை தான் கொடுத்தது. தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்றிருந்தாலும் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரும் சரிவை சந்தித்தது. இதுமட்டுமல்லாமல் தென் மாவட்டங்களிலும் ஒரு சில தொகுதிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

தேர்தல்
இனி அடுத்தடுத்து உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தல் என வரவிருப்பதால் வயது முதிர்வால் செயல்பட முடியாமல் தவிக்கும் சீனியர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சிறுத்தை பாய்ச்சலில் கட்சிக்காக உழைக்க காத்திருக்கும் இளசுகளுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்திருக்கிறது திமுக தலைமை.

முக்கியத்துவம்
அதேவேளையில் சீனியர்கள் யாரும் மனச்சோர்வு அடைந்துவிடாத படி அவர்களுக்கு சார்பு அணிகளில் மாநில அளவிலான ஏதேனும் ஒரு பதவியை கொடுக்கவும், அறிவு சார் அணி என்ற பெயரில் புதிய அணியை உருவாக்கி அங்கு அவர்களை ஐக்கியப்படுத்தவும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. ஆட்சி, கட்சி, என இரண்டையும் இரண்டு கண்கள் போல் கருதும் ஸ்டாலின், இதனை வலிமைப்படுத்தவும், செழிமைப்படுத்தவும் சிந்திக்காத நாட்கள் இல்லை.

விமர்சனம்
திமுகவில் புதியவர்களுக்கு வாய்ப்பே கிடைக்காது என்றும் குறிப்பிட்ட சிலரால் மட்டும் தான் அங்கு உயர்ந்த பதவிகளுக்கு வர முடியும் எனவும் அதிமுக விமர்சித்து வரும் நிலையில், அந்த விமர்சனத்தை பொய்யாக்கும் வகையில் அதிரடிகளுக்கு தயாராகி வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். கொரோனா தடுப்பு பணிகள், பட்ஜெட் கூட்டத் தொடர் பணிகள் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் அவர், இந்த நிகழ்வுக்கு பிறகு கட்சியில் சாட்டையை சுழற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications