மக்களிடம் சலித்துக் கொள்ளாதீர்.. பொறுமையா காது கொடுத்து கேளுங்க.. நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கட்டளை..!
சென்னை: திமுக நிர்வாகிகள் எந்தக் காரணத்துக்காகவும் மக்களிடம் சலித்துக்கொள்ளக் கூடாது என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அன்புக்கட்டளை பிறப்பித்துள்ளார்.
Recommended Video

மக்கள் ஆதங்கப்படத்தான் செய்வார்கள் என்றும் நாம் தான் பொறுமையாக காது கொடுத்துக் கேட்டு அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் குறைகள் களையப்படும் என்ற நம்பிக்கையை அவர்களுக்கு திமுகவினர் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பொறுமை முக்கியம்
திமுக மாவட்டச் செயலாளர்கள், மாநகரச் செயலாளர்கள், ஒன்றியச் செயலாளர்கள் என அனைத்து மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஸ்டாலின், அதில் பல்வேறு அட்வைஸ்களை கூறியிருக்கிறார். குடிநீர் வசதியில்லை, ரேஷன் கடை இல்லை, போக்குவரத்து வசதி இல்லை என அடுக்கடுக்கான குறைகளை கிராமமக்கள் சொல்வார்கள் என்றும் அவர்கள் சொல்வது அனைத்தையும் பொறுமையாக கேட்பதுடன் சலிப்பை காட்டக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்.

நினைவுப்படுத்துக
கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லை என்பதை கிராம மக்களுக்கு விளக்கமாக எடுத்துரைத்து அடுத்ததாக ஆட்சிக்கு வந்தவுடன் செய்வோம் என்ற உறுதியை திமுகவினர் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே திமுக ஆட்சிப் பொறுப்பில் அந்தந்த ஊர்களுக்கு என்ன செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு நினைவுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

திருமண விழா
மு.க.ஸ்டாலின் இந்த அறிவுறுத்தலை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நிர்வாகிகளும் தலையசைத்து ஏற்றுக்கொண்டனர். மேலும், உங்கள் வீட்டுத் திருமண விழாவுக்கு எப்படி வீடு வீடாக சென்று உறவினர்களை நண்பர்களை அழைப்பீர்களோ, அதைப்போல் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மக்களை வீடு வீடாக சென்று அழைக்க வேண்டும் என நிர்வாகிகளை ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

நம்மால் முடியும்
நம்மால் முடியும் நம்மால் மட்டுமே முடியும் என்பதை திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மனதில் தாங்கிக் கொண்டு தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் 200 தொகுதிகளுக்கு குறையாமல் நாம் வெற்றிபெற வேண்டும் எனவும் ஸ்டாலின் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications