தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும்! அதிகாரிகளுக்கு ஸ்டாலின் புத்திமதி!
சென்னை: தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் புத்திமதி வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
அதில் முதல்வர் ஆற்றிய உரை வருமாறு;

''பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால், சாலைகளில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் உயர்ந்து காணப்படுகிறது.
அதேபோல், இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் பன்மடங்கு உயர்ந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், சாலைகளின் தரம் சிறப்பாக இருக்க வேண்டுமென்று மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது நியாயமானதே.
துறைகளுக்குள் இருக்கிற பிரச்சினைகள், குறிப்பாக, சுற்றுச்சூழல், நிலஎடுப்புப் பிரிவுகளில் போதுமான எண்ணிக்கையில் மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்தல், நிருவாக ரீதியிலான தாமதங்களைத் தவிர்த்தல் போன்றவற்றில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தரமான சாலைகள் மக்களிடம் நிச்சயம் நல்ல பெயரைப் பெற்றுத் தரும். தற்போது நான் சென்னையில் பல இடங்களில் சாலைகளில் மெட்ரோ இரயில் பணிகள் தவிர்த்து, பல்வேறு இதர காரணங்களுக்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளதைக் காண்கிறேன். இது சாலை உபயோகிப்பவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளித்து வருவதோடு, அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகின்றன.
எனவே, தோண்டப்படும் சாலைகள் விரைந்து சரிசெய்யப்பட வேண்டும்; இதனை பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மட்டுமல்ல; அனைத்துப் பகுதிகளிலும் கண்காணிக்கப்பட வேண்டும்.
பணி முன்னேற்றத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால், அது உடனடியாக தலைமைச் செயலாளர் அல்லது துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, தீர்க்கப்பட வேண்டும். பணி முன்னேற்ற அறிக்கையினையும் எனக்கு அனுப்பி வைக்க தொடர்புடைய துறைச் செயலாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நாம் இன்று ஆய்வு செய்த பணிகளுக்கெல்லாம் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அவற்றை விடுவிப்பதில் தாமதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
எனவே, இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு ஏற்ப, குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே பணிகளை முடியுங்கள். பிரச்சினைகள் இருந்தால், மீண்டும் சொல்கிறேன், அமைச்சர்களின் கவனத்திற்கும், என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வாருங்கள்.''












Click it and Unblock the Notifications