மாநில அரசின் கொள்கை முடிவு படி தான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்! ஸ்டாலின் மிக திட்டவட்டம்!
சென்னை: மாநில அரசின் கொள்கை முடிவு படி தான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் மிகத் திட்டவட்டமாக துணைவேந்தர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என சொல்வதை ஏற்க முடியாது எனக் கூறியிருக்கிறார்.
தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

துணை வேந்தர்கள் மாநாடு
பல்கலைக்கழகங்களை வளர்த்தெடுக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. ஏனென்றால், இது எங்களது முழுப் பொறுப்பு!அதேநேரத்தில், மாநில அரசின் கொள்கை முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு பல்கலைக் கழகங்கள் செயல்பட வேண்டும்.
பல்கலைக் கழகங்களின் உண்மையான நோக்கம் என்பது அனைவருக்குமான அறிவுத்தளத்தை செம்மைப்படுத்துவது!

கொள்கை விழுமியங்கள்
சமூகநீதியை அடித்தளமாகக் கொண்ட சமுதாயத்தில், பகுத்தறிவைக் கூர்மைப்படுத்துவதாக, நம்முடைய கல்வி நிலையங்கள் செயல்பட வேண்டும். அறிவியல் சிந்தனை கொண்ட சமூகத்தையும், அறிவுப்பூர்வமான மாணவர்களையும், உருவாக்கக் கூடிய கடமையைத்தான் பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டும்!நாட்டின் மற்ற மாநிலங்களைவிட நாம் முன்னேற்றம் அடைந்ததற்கும், தனித்துத் தெரிவதற்கும் இத்தகைய கொள்கை விழுமியங்கள்தான் காரணம்!

மாநில அரசின் கொள்கை முடிவு
மாநில அரசின் கொள்கை முடிவுகளை பிரதிபலிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும், துணை வேந்தர்களாகிய நீங்கள் எல்லாம் செயல்பட வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். பட்டம் வாங்கும் இளைஞர்களை அல்ல, எவரோடும் போட்டியிடும் தகுதி படைத்த இளைஞர்களை தமிழ்நாட்டுக் கல்வி முறையானது உருவாக்கி இருக்கிறது. 'நீட்' தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத் தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை. அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது ஏற்க முடியாதது.

தேசியக் கல்விக் கொள்கை
எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க வேண்டும்.மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும் அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்!அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசியக் கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம்.

புதிய புதிய பாடங்கள்
புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள். மாணவர் சமுதாயத்துக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதனுள் அவர்களைப் பொருத்திக் கொள்ள அனுமதியுங்கள்.புதிய பாதைகள் அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும். இந்த ஆட்சிக் காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களின் கடமை!












Click it and Unblock the Notifications