ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 52,000 இந்தியர்களுக்கு சிக்கல்.. குரல் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு சவுதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் இருந்து தனியார் நிறுவனங்கள் மூலமாக ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான ஒதுக்கீடு திடீரெனக் குறைக்கப்பட்டிருப்பது பல்லாயிரக்கணக்கானோரை பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் உடனடியாக சவுதி அரசுடன் பேசி, இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 1.75 பேரில் 52,000 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்ல உள்ளனர். ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் செல்லும் பயணிகளுக்காக மெக்கா அருகே உள்ள மினாவில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
மினாவில் 5 மண்டலங்களில் இந்தியப் பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கட்டணம் தாமதமாவதை காரணம் காட்டி 5 மண்டலங்களில் 2 மண்டல ஒதுக்கீடுகளை சவுதி அரசு ரத்து செய்துவிட்டது. எஞ்சிய 3 மண்டலங்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதியையும் சவுதி அரேபிய அரசு நிறுத்திவிட்டது. சவுதி அரேபிய அரசின் நடவடிக்கையால் இந்தியாவில் இருந்து 52,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வது கேள்விக்குறியாகி உள்ளது. தனியார் வழியாக ஹஜ் பயணத்துக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட 5 முதல் 8 லட்சம்.
இந்நிலையில் இதுபற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், "இந்திய ஹஜ் பயணிகளுக்கான தங்குமிடம் உறுதி செய்யப்படாததால் அவர்களின் பயணத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியர்களின் ஹஜ் பயணத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். சவூதி அரேபிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தீர்வு காண வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications