விடிஞ்சா ஓட்டு எண்ணிக்கை.. திடீரென கலைஞர் நினைவிடத்துக்கு சென்று அமைதியாக அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று திடீரென கலைஞர் கருணாநிதி நினைவிடத்துக்குச் சென்றுள்ளார்.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தமிழகம் முழுவதும் 62 மையங்களில் நாளை நடத்தப்படுகிறது. சமீபத்தில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன. இதனால் திமுகவினர் மிகுந்த உற்சாகமாக காணப்படுகின்றனர்.

எனினும், தவெகவின் வருகை, திமுகவுக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் என்றும் சில கருத்துக்கணிப்புகள் குறிப்பிட்டுள்ளன. இதன் காரணமாக, தேர்தல் ரிசல்ட் கணிக்க முடியாததாகவே உள்ளது. எனவே, தமிழக சட்டசபை தேர்தல் ரிசல்ட், அனைவராலும் மிகுந்த எதிர்பார்ப்போடு எதிர்நோக்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தியுள்ளார். அங்கு சிறிது நேரம் அமர்ந்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் உடன் அமைச்சர் சேகர்பாபு, டி.ஆர்.பாலு எம்.பி., ஆ.ராசா எம்.பி, ஆகியோரும் அங்கு சென்றிருந்தனர்.
அப்போது அங்கு குவிந்திருந்த பொதுமக்கள், முதல்வர் ஸ்டாலினிடம், மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் எனக் கூறி வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினை வாழ்த்தி கோஷமிட்டனர். இந்நிலையில் அதுதொடர்பான புகைப்படம் மற்றும் காணொளி வெளியாகியுள்ளது.
ஒட்டுமொத்த தமிழகமே, அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டை ஆளப்போவது யார் என்பதை அறிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறது. இந்நிலையில், விடிந்தால் வாக்கு எண்ணிக்கை என்ற சூழலில், முதல்வர் ஸ்டாலின், கலைஞர் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தியதோடு, அங்கு அமர்ந்து நேரம் செலவிட்டது கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையே, அண்ணா அறிவாலயத்தின் நுழைவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரிய டிஜிட்டல் திரையில், ஸ்டாலின் படத்துடன் "ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்", "திராவிட மாடல் 2.0" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த கவுண்டவுன் திரை கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பே அமைக்கப்பட்டது.
இந்த கவுண்ட்-டவுன் திரையில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளான நாளையை (மே 4, 2026) நோக்கிய நேரக் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெற்றியாளாரைத் தீர்மானிப்பதற்கு இன்னும் எத்தனை மணி நேரங்கள், நிமிடங்கள் மற்றும் நொடிகள் மீதமுள்ளன என்பதைக் காட்டுகிறது திமுகவின் இந்த கவுண்ட்டவுன்.













Click it and Unblock the Notifications