மோடி பேச்சால் ஸ்டாலினுக்கு கலக்கம்.. அவசரமா அறிக்கை விட்டு மாட்டிக்கிட்டார்.. வானதி விமர்சனம்
சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக வும் முயற்சி செய்கின்றன. அதிமுக - பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது திமுகவை மோடி விமர்சித்த நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டில் டபுள் எஞ்சின் டப்பா ஓடாது என பதிலடி கொடுத்திருந்தார். இதற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதில் கொடுத்துள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதியின் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. 'திமுகவின் ஊழல், குடும்ப, மாபியா ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிக்க வேண்டும்' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவல் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திமுக கூட்டணிக்கு கலக்கம்
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் திரண்ட பல லட்சக்கணக்கான மக்கள் கூட்டமும், திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் 'கவுன்டவுன்' துவங்கி விட்டது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 'டபுள் எஞ்சின்' அரசு அமைவது உறுதி' என்ற பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளை, குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கலக்கமடைய வைத்துள்ளது.
அதன் வெளிப்பாடு முதலமைச்சர் ஸ்டாலினின் அறிக்கை. 'பிரதமர் சொல்லும் டபுள் எஞ்சின் எனும் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது. மத்திய பாஜக அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது' என அவர் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு 1998 முதல் 2004 வரை வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் அமைக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலை போன்ற உள் கட்டமைப்பு வசதிகள்தான் காரணம்.
டபுள் எஞ்சின் சாதனை தெரியுமா
வாஜ்பாய் ஆட்சியில்தான் சென்னையைச் சுற்றி வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலைகள் அதிகம் வந்தன. வாஜ்பாய் ஆட்சியில் அமைக்கப்பட்ட 'டைடல் பூங்கா' தான், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது. கடந்த 11 ஆண்டுகால மோடி ஆட்சியில் அமைக்கப்பட்ட நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், புதிய ரயில்கள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மத்திய பாஜக அரசு பெரும் பங்களித்துள்ளது. இதை தமிழ்நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். மிகவும் பின்தங்கியிருந்த உத்தரப்பிரதேசம் 'டபுள் எஞ்சின்' அரசால், இன்று நாட்டின் ஐந்தாவது பொருளாதார மாநிலமாக மாறியுள்ளது. சுதந்திரம் அடைந்ததில் இருந்தே வளர்ச்சி பாதையில் உள்ள தமிழ்நாட்டில், 'டபுள் எஞ்சின்' அரசு இருந்தால், வளர்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். அதைத்தான் பிரதமர் கூறியிருக்கிறார்.
அதை 'டப்பா எஞ்சின்' என்று கூறும் அளவுக்கு, மதுராந்தகம் பொதுக்கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலினை கோபமடையச் செய்துள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத் தீவு, ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக அரசு செய்த துரோகத்தை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். துரோகம் பற்றி பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது. மதுராந்தகம் பொதுக்கூட்டத்தின் வெற்றிக்கு முதலமைச்சர் ஸ்டாலினின் உடனடி அறிக்கையே சாட்சி" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications