எல்லார்க்கும் எல்லாம் என்ற லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக 2024 அமையட்டும்! ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: எல்லார்க்கும் எல்லாம் என்ற லட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக 2024 அமையட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு;

''புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஔிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது.
"எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!'' இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஆங்கில புத்தாண்டு வாழ்த்து பெறுவதற்காக முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க வருவதை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கட்டாயம் தவிர்க்க வேண்டும் என திமுக தலைமைக்கழகம் வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது.
வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதாலும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும், ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முதல்வர் தவிர்த்திருப்பதாக காரணமாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications