சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுப்போம்.. பத்திரிகையாளர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!
சென்னை: தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை ஒட்டி பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் நாள், தேசிய பத்திரிகையாளர் நாளாக 1996ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று போற்றப்படுவது பத்திரிகை ஊடகம். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர்களுக்கு பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பத்திரிகையாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உண்மையான ஊடகவியலே துடிப்பான மக்களாட்சியின் கண்காணிப்பாளர். எனவே, தேசிய பத்திரிகை நாளில், ஊடகத்தின் ஆற்றலையும் பொறுப்பையும் உணர்த்துவோம். அரசியல் அழுத்தங்களுக்கு சிலர் அடிபணியும் இக்காலத்தில், சாய்வற்ற நேர்மையான ஊடகவியலை முன்னெடுத்து, சுதந்திரமான ஊடகத்தின் அடிப்படை மாண்புகளை உயர்த்திப் பிடிப்போம்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "தேசிய பத்திரிகை தினத்தில் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள். வலுவான, வளமான குடிமக்களை மையமாகக் கொண்ட ஜனநாயகத்தை கட்டியெழுப்ப சுதந்திரமான மற்றும் நியாயமான ஊடகம் முக்கியமானது. அந்த பெரும் எதிர்பார்ப்புடன் ஊடகவியலாளர்களை தேசம் எதிர்நோக்குகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது சமூகவலைதள பக்கத்தில், "சனநாயகமும் பத்திரிகைத்துறையும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற பல தலைவர்கள் தங்கள் புரட்சிகர கருத்துகளை மக்களிடம் கொண்டு செல்ல பத்திரிகைத்துறையை பயன்படுத்தியவர்கள்.
கடைசி மனிதனுக்கும் நடக்கும் அநீதியை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒளியாக பத்திரிகையும் ஊடகமும் இருக்க வேண்டும். சனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் என்றைக்கும் அறம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்று தேசிய பத்திரிகையாளர் நாளில் வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications