இன்று ஸ்டேட் பாங்க் கிளார்க் பணி தேர்வு! 4 தமிழக எம்.பி.க்கள் போராடியும் தேதி மாற்றப்படவில்லை!
சென்னை: பொங்கல் திருநாளான இன்று பாரத ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வை நடத்தக்கூடாது என தமிழக எம்.பி.க்கள் 4 பேர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியும் தேர்வு தேதியை எஸ்.பி.ஐ. தலைமை மாற்றவில்லை.
இதனால் கடும் கோபம் அடைந்துள்ள சு.வெங்கடேசன் எம்.பி. 'கயமைத் தனத்தை கடைபிடிக்கிறது ஒன்றிய அரசு என்றும் தமிழர்களின் பண்பாட்டையும், உரிமையையும் அவமதிப்பதும் அலட்சியப்படுத்துவதுமே பாஜக அரசின் தினசரி பணியாக இருக்கிறது எனவும் சாடி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கி உடனடியாக தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என அதன் தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருமாவளவன், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், செல்லக்குமார் உள்ளிட்டோர் காத்திருப்பு போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

கிளார்க் பணி
தமிழகத்தை பொறுத்தவரை ஜனவரி 15, 16, ஆகிய 2 தேதிகளிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இத்தகைய சூழலில் பாரத ஸ்டேட் வங்கி தேர்வு நடத்துவது என்பது அந்த தேர்வில் தமிழர்கள் அதிகளவு கலந்துகொள்ள முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழர்கள் ரயில்வே தேர்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், வங்கி கிளார்க் பணியிடங்களுக்கான தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

13,000 தமிழக இளைஞர்கள்
தமிழக இளைஞர்கள் ஏராளமானோர் வங்கிப் பணிகளில் சேர ஆர்வம் காட்டி வரும் நிலையில், பொங்கல் திருநாளான இன்று நடத்தப்படும் தேர்வானது அவர்களுக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 13,000 பேர் இந்த தேர்வை எழுதுவதற்காக விண்ணபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தேர்வு நடைபெறுவதன் மூலம் தேர்வு எழுத வருபவர்களின் எண்ணிக்கை குறைவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது.

4 எம்.பி.க்கள்
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருமாவளவன், சு.வெங்கடேசன், தமிழச்சி தங்கபாண்டியன், செல்லக்குமார் இது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியின் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி தேர்வு தேதியை மாற்ற அழுத்தம் கொடுத்ததோடு, சென்னையில் உள்ல எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருப்பு போராட்டமும் நடத்தினர்.

முடிவில் மாற்றமில்லை
இதனிடையே இந்த விவ்காரத்தில் தலையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பேசினார். ஆனால் எஸ்.பி.ஐ. கிளார்க் தேர்வு தேதியை மாற்ற முடியாது என மத்திய அரசு கைவிரித்துவிட்டது. இதனால் தமிழர் விரோத பாஜகவை தமிழ்நாடு ஒரு நாளும் மன்னிக்காது என சு.வெங்கடேசன் தனது சமூகவலைதப்பக்கத்தில் பதிவு வெளியிட்டு கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications