“இன்னும் எத்தனை காலம் அவர்கள் கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது?” - ஸ்டாலின்
சென்னை: “அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும். மாநிலங்கள் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக ஒன்றிய அரசு இருக்க வேண்டும். இன்னும் எத்தனை காலம் அவர்கள் கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது?” என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

சட்டமன்ற கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம், இன்று முதல் சட்டமன்றத்தில் நடைபெற்றது. இதையடுத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கேள்விக்கான விடைகள் அளிக்கப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டி வருகிறது. அண்ணா இறுதியில் எழுதியதுதான் மாநில சுயாட்சி கொள்கை. ஒன்றிய - மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்க இருக்கிறோம். கூட்டாட்சி தத்துவத்தை அரசியல் சட்டத்தின் கோட்பாடாக மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.
மாநிலத்தில் சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் ஒன்றிய அரசு வைத்துள்ளது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை. இன்னும் எத்தனை காலங்கள் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்தில் இருப்பது என முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சூரியன் ஜோசப் குழு அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கை குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட்டுள்ளது. எனவே நாம் முயன்றால் மீண்டும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்த முடியும்.
அதிகாரமும் வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்து இருக்க கூடாது. அதை பரவலாக்கப்பட வேண்டும். அதற்கான சட்டபூர்வமான வழிகளை இந்த அறிக்கை நமக்கு வழங்கி இருக்கிறது. மாநில சுயாட்சிக்கான முன்னெடுப்பை நாம்தான் செய்ய வேண்டும். நம்மைவிட்டால் செய்ய யாரும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications