டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவம்? எடப்பாடி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
சென்னை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிக்கு தையல் போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக அரசை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கொடுத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
"மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் மருத்துவர்கள் இன்றி, ஊழியர்களே தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மின்வெட்டு காலங்களில் அரசு மருத்துவமனைகள் முடங்காமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகளோ, எல்லா நேரங்களிலும் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்களோ இல்லாத அவல நிலைக்கு மருத்துவத் துறையை அதள பாதாளத்தில் தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

திமுக ஆட்சியில் முதலமைச்சரோ மக்கள் வெள்ளத்தில் தத்தளிப்பது குறித்த எந்த அக்கறையும் இன்றி கூட்டணி கட்சி கூட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார். ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக்கொண்டு, தங்கள் துறைசார் பணிகளை இனியாவது கவனிக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "மானாமதுரை அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குத் தையல் போடும் நேரத்தில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது.
அப்போது மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர் எதிர்பாராதவிதமாக பழுதாகிவிட்டதால் இடைப்பட்ட நேரத்தில் டார்ச் லைட் வெளிச்சத்தில் தலையில் தையல் போட்டு சிகிச்சை அளித்ததை தன்னுடைய விளம்பரத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்கிறார்.
எக்ஸ் தளத்தில் எழுத எதுவும் கிடைக்காதா? எனத் தினமும் ஏங்கும் 'ஆண்ட்ராய்டு போபியோ' வந்து பழனிசாமியை ஆட்டிப் படைக்கிறது போல. எந்த சூழலிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட ஜெனரேட்டர் உட்பட எல்லா முன்னேற்பாடுகளுடன்தான் அரசு மருத்துவமனைகள் திராவிட மாடல் ஆட்சியில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
காலி பணியிடங்கள் ஏற்படும் போதெல்லாம் டாக்டர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். வரும் ஜனவரி 5ஆம் தேதி கூட 2,553 டாக்டர்கள் பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது.
கூட்டணிக் கட்சிகள் யாராவது வர மாட்டார்களா? என அல்லாடும் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்றால் அடி வயிறு எரியத்தானே செய்யும். துணை முதல்வர் பிறந்தநாள் கூட்டம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக நடத்த முடிவு செய்திருந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்பு ஏற்பட்டது. உடனே அதனை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தினோம். அந்த நிவாரண உதவி நிகழ்ச்சியையும் கேலி செய்து பாதிக்கப்பட்ட குடும்பங்களை எள்ளி நகையாடுகிறார் எதிர்க் கட்சித் தலைவர்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications