பாஜக தான் வெல்லும்.. ஆனா 370 சீட்களுக்கு கீழ் குறைந்தால் பங்குச்சந்தை சரியும்! பிரசாந்த் கிஷோர் பரபர
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜக 370 இடங்களில் வெல்லவில்லை என்றால் பங்குச்சந்தையில் என்ன நடக்கும் என்பதைப் பிரபல தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் விளக்கியுள்ளார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் இரு கட்ட தேர்தல் நடக்க உள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. இதற்கிடையே பாஜகவின் தேர்தல் வியூகம் குறித்து பிரசாந்த் கிஷோர் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
லோக்சபா தேர்தல்: லோக்சபா தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வென்றால் போதும் என்று நினைத்து பிரச்சாரம் செய்யாமல் குறைந்தது 370 இடங்களில் வெல்ல வேண்டும் என்பதை முன்னிறுத்தி பாஜக பிரச்சாரம் செய்வது நல்ல அணுகுமுறை என்று தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.. இருப்பினும், பாஜக 370 சீட்களில் வெற்றி பெறவில்லை என்றால் பங்குச் சந்தை சரியும் என்றும் அவர் தெரிவித்தார்.
பங்குச்சந்தை: இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் மேலும் கூறுகையில், "ஒரு நிறுவனம் இருக்கிறது.. அந்த நிறுவனத்தின் மீது எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் டார்கெட்டை அடையவில்லை என்றால்.. அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும் கூட பங்குச் சந்தை அவர்களைத் தண்டிக்கும். அப்படி தான் பாஜக 370 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றால், அது விவாத புள்ளியாக மாறும்.. பங்குச் சந்தையிலும் அது எதிரொலிக்கும்" என்றார்.
நரேந்திர மோடி முதல்முறையாக வென்று பிரதமரான 2014 லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து பணியாற்றியவர் பிரசாந்த் கிஷோர்.. அதன் பிறகும் கூட பல்வேறு அரசியல் கட்சிகளுக்காக அவர் தேர்தல் ஆலோசகராக இருந்துள்ளார். கடந்த 2021இல் திமுகவின் தேர்தல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவே வென்று ஆட்சியைத் தக்க வைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவுக்குப் பாராட்டு: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாஜக 370 இடங்கள் இலக்காக வைத்து பிரச்சாரம் செய்தது உண்மையிலேயே புத்திசாலித்தனமானது.. இது தேர்தல் போக்கையே மொத்தமாக மாற்றிவிட்டது. கடந்த மூன்று, நான்கு மாதங்களாகவே இதைச் சுற்றியே விவாதம் நடக்கிறது.. பாஜக 370 இடங்களில் வெல்ல முடியுமா என்பதைச் சுற்றியே விவாதம் இருந்துள்ளது.
செம யுக்தி: இது பாஜகவின் மிகச் சிறந்த யுக்தி.. அல்லது எதிர்க்கட்சியின் பலவீனம் என்றும் சொல்லலாம்.. பாஜக இலக்கை 272இல் இருந்து 370+ ஆக மாற்றியுள்ளது. இது பாஜகவுக்கு மிகப் பெரிய பலனைக் கொடுத்துள்ளது. இப்போது, மோடி தோற்றுவிடுவார் என்று யாரும் கூறவில்லை.. பாஜகவுக்கு 370 இடங்கள் கிடைக்காது என்றே கூறுகிறார்கள்.. இதுதான் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்ட்.. பாஜக 370 இடங்களுக்குக் குறைவாகப் பெற்றாலும் கூட அவர்கள் தான் ஆட்சியை அமைப்பார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
நமது நாட்டில் லோக்சபாவில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. அதில் 50%, அதாவது 272 இடங்களில் வெல்லும் கட்சி அல்லது கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்.












Click it and Unblock the Notifications