தமிழகத்திற்கு மோச்சா புயலால் இப்படி ஒரு நிலை வரப்போகுதா? நோகடிக்க போகும் வானிலை மாற்றம்
சென்னை: அக்னி வெயிலை மேலும் அதிகரிக்க போகிறது 'மோச்சா' புயல். இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 4 நாட்கள் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 'அக்னி நட்சத்திரம்' காலம் தொடங்கி உள்ள நிலையில், வெயிலின் கொடூரம் கடுமையாக ஆரம்பித்தது, ஆனால் திடீரென பெய்த கோடை மழை கொஞ்சம் ஆறுதலை தந்தது. இதனிடையே வரலாற்றில் அபூர்வமாக கோடையிலேயே புயல் உருவாக போவதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது,.

இதன்படி வங்கக்கடலில் உருவான தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று புயலாகவும் உருவானது. இதற்கு மோச்சா புயல் என்று பெயரும் வைக்கப்பட்டது. இந்த புயல் வியாழக்கிழமை (இன்று) தீவிர புயலாகவும், அதன்பின்னர் அதிதீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
என்னங்க சொல்றீங்க.. நல்லது தானே நல்ல மழை விழுகும்ல என்று கேட்கிறீர்களா... அதுதான் இல்லை , இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை வராது கடுமையான வெயில் தான் அதிகமாக போகிறது என்கிறது வானிலை ஆய்வு மையம்.
தற்போது உருவாக உள்ள புயலானது மத்திய வங்கக்கடல் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக நிலப்பரப்பில் இருக்கும் காற்றானது கடல்பரப்புக்கு செல்லும் என்பதால், தமிழகத்தில் வெயிலின் தாக்கமும், தரைக்காற்றின் வெப்பநிலையும் அதிகரிக்க போகிறதாம்.
வானிலை ஆய்வாளர்களின் கருத்துப்படி, இன்று முதல் வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரையிலான 4 நாட்கள் தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 4 டிகிரி வரை உயரக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் ஏற்படும் என்கிறார்கள். அதேநேரம் சிறிய ஆறுதலாக சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்பு உள்ளதாம்.

அதேநேரம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வெப்பநிலை குறித்து வானிலை மையம் 'அசவுகரியம்' என்ற கூறியுள்ளது அல்லவா? அதற்கு என்ன அர்த்தம் என்றால், இந்த 4 நாட்களும் வெயில் கொளுத்தி எடுக்க போகிறது என்பதுதான் அர்த்தமாம். இந்த 4 நாட்களும் ஜன்னலை திறந்தாலும், சாலையில் நடந்தாலும், மின்விசிறியை போட்டாலும் வீசும் அனல் கலந்த காற்றுதான் வீசும் என்கிறார்கள். வழக்கத்தைவிட வெளியில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications