“ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ஆக்ஷன்.. களத்தில் இறங்கும் டீம்”: அமைச்சர் சிவசங்கர்
சென்னை: கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தீபாவளியையொட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்த நிலையில் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகையை மக்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாட விரும்புவார்கள். வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களது குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், மதுரை போன்ற பெருநகரங்களில் வசித்து வரும் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது.

அரசு பேருந்துகள், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் தனியார் பேருந்துகளில் பயணிப்பது வழக்கம். தனியார் பேருந்துகளைப் பொறுத்தவரை பண்டிகை நாட்களில் வழக்கமான கட்டணத்தை காட்டிலும் அதிகளவு கட்டணத்தை வசூலிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தனியார் பேருந்துகளில் முன்பதிவு தீவிரமாக நடந்து வருகிறது. ஆம்னி பேருந்துகள் தங்களது வழக்கமான கட்டணத்தை காட்டிலும் பல மடங்கு கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளைக்கு எதிராக அரசு பல முறை நடவடிக்கைகள் எடுத்தும், தொடர்ந்து கட்டண கொள்ளை அரங்கேறி வருகிறது.
இதைத் தடுக்க அரசு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் சிவசங்கர், "கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண வசூலை கண்காணிக்க போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், நெல்லை உள்ளிட்ட இடங்களில் நேரடியாகச் சென்று கண்காணிப்புகள் மேற்கொள்வார்கள்" என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications