அரசுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் எதிராக.. அவதூறு பேசினால் நடவடிக்கை.. தமிழ்நாடு போலீஸ் வார்னிங்!
சென்னை: ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அரசுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் எதிராக அநாகரீகமாவும், அவதூறாகவும் பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் பொய்யான கருத்துக்களை தெரிவிக்கும் நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். சாட்டைதுரைமுருகன், கிஷோர் கே சாமி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் சொன்ன கருத்துக்கள் உட்பட பல்வேறு புகார்கள் காரணமாக கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் பப்ஜி மதன் யூடியூபில் ஆபாசமாக பேசி, இணையத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

அறிவிப்பு
இது தொடர்பாக தமிழ்நாடு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவீன அறிவியல் வளர்ச்சியின் முக்கிய அங்கமாக விளங்கும் சமூக வலைதளங்கள் மற்றும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் பத்திரிகைகள் வாயிலாக பலரும் சமுதாயம், அரசியல் உள்ளிட்டவை சார்ந்த ஆக்கப்பூர்வமான தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பரம்
ஆனால், சிலர் சுய விளம்பரத்திற்காக ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் அருவருப்பான மற்றும் அவதூறு செய்திகளை பதிவு செய்து, சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை தூண்டி வருகின்றனர். அதிலும் குறிப்பிட்ட சிலர், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சொந்த ஆதாயத்திற்காகவும், மக்கள் மத்தியில் பிரபலம் அடைய வேண்டும் என்ற எண்ணத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராகவும் தொடர்ந்து மலிவான, தரம் தாழ்ந்த கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.

சீர்குலைப்பு
இத்தகைய அநாகரிகமான பதிவுகள் பொது அமைதியை சீர்குலைப்பதற்கும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கும் வித்திடுகின்றன. காவல் துறையைப் பொறுத்தவரை, சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் சட்டம் ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், கட்சி, சாதி, மதம் சார்ந்த இரு தரப்பினருக்கிடையே மோதல்களைத் தூண்டும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்தால் அதற்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

பல ஆண்டு
இத்தகைய சட்ட நடவடிக்கைகள் காலம் காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் எல்லை மீறிய அளவில் அவதூறுப் பதிவுகளை மேற்கொண்ட 16 நபர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவதூறு
எனவே, ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று தமிழ்நாடு காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டள்ளது.












Click it and Unblock the Notifications