10 வகுப்பு பொதுத் தேர்வு பணி.. எஸ்கேப் ஆகும் தனியார் பள்ளிகள்.. பள்ளிக் கல்வித் துறை வார்னிங்!
சென்னை: தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுத் தேர்வுப் பணிகளுக்கு ஆசிரியர்களை தனியார் பள்ளிகள் அனுப்புவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுத் தோ்வுப் பணிகளுக்கு தனியாா் பள்ளி ஆசிரியா்களை அனுப்பவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நடப்பு ஆண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி, 27 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு 28 ஆம் தேதி தொடங்கியுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 113 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வை எழுதினர். இந்த பொதுத் தேர்வு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வின் முதல் நாளில் தமிழ் உள்பட மொழிப் பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன.
பொதுவாக பொதுத் தோ்வுகள் நடைபெறும்போது தேர்வு அறை கண்காணிப்பு பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நடைபெறும் மையங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். இதனால், அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் போக கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் தனியாா் பள்ளி ஆசிரியா்களும் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இந்நிலையில், சென்னை உள்பட சில மாவட்டங்களில் தனியாா் பள்ளிகள் ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்புவதில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, தனியாா் பள்ளி ஆசிரியா்களை தோ்வுப் பணிக்கு அனுப்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தோ்வுத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் சாா்பில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில், பொதுத் தோ்வுப் பணிக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியா்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும். தோ்வுப் பணிக்கு வராமல் இருந்தால் அந்தந்த தனியாா் பள்ளி நிா்வாகங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications