சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. ஹாஸ்டல் அறைக்குள் சடலமாக மீட்பு
சென்னை ஐஐடி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: சென்னை ஐஐடி கல்வி நிலையத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மாணவர் கோபால் பாபு. 26 வயதான இவர் சென்னை ஐஐடியில் எம்.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். வெளிமாநிலம் என்பதால் இங்குள்ள பிரம்மபுத்திரா என்ற ஹாஸ்டலில் தங்கி வந்தார்.
இந்நிலையில், இவர் தனது அறையில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஹாஸ்டல் நிர்வாகத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தந்தார்கள்.
சடலம் மீட்பு
விரைந்து வந்த போலீசாரும் தூக்கில் தொங்கிய மாணவரின் சடலத்தை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மாணவரின் தற்கொலைக்கு காரணம் உடனடியாக தெரியவில்லை.
விசாரணை ஆரம்பம்
தானாகவே மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது தற்கொலைக்கு காரணம் யார்? என்பது குறித்த விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
3 பேர் தற்கொலை
கடந்த 5 மாதத்தில் மட்டும் ஐஐடியில் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே தொடர்ச்சியாக இந்த வளாகத்தில் மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதுடன், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.
பெற்றோர் கோரிக்கை
சென்னை ஐஐடியில் ஏராளமான கனவுகளுடன் ஹாஸ்டலில் தங்கி மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், மன அழுத்தம் காரணமாக இப்படி தற்கொலைகள் செய்து கொள்வது கவலையை அளிப்பதாகவும், மாணவர்களின் நலனை பல்கலைக்கழக நிர்வாகம் கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.