+2 Exam results 2026: தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வில் 582/600 பெற்ற சிவகங்கை ஹர்ஷித்!
சென்னை: தந்தை இறந்த துக்கத்திலும் பிளஸ் 2 தேர்வில் 600-க்கு 582 மதிப்பெண்களை வாங்கிய மாணவருக்கு பாராட்டுகள் குவிகின்றன. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றுவேன் என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையைச் சேர்ந்த செந்தில்குமாரின் மகன் ஹர்ஷித் ராஜலிங்கம். இவர் சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பிளஸ்-2 தமிழ் தேர்வு தொடங்கியபோது, ஹர்ஷித் தந்தையிடம் ஆசி பெற்று தேர்வெழுதச் சென்றார்.

தேர்வின்போதே, தந்தை செந்தில்குமார் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். தேர்வு முடிந்ததும் தந்தையின் மரணச் செய்தியைக் கேட்டு ஹர்ஷித் கதறி அழுதார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்ற, அடுத்த தேர்வுகளில் முழு கவனம் செலுத்திப் படித்தார். சமீபத்தில் வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவுகளில், ஹர்ஷித் ராஜலிங்கம் 600-க்கு 582 மதிப்பெண்கள் பெற்று, பள்ளி அளவில் இரண்டாம் இடம் பிடித்தார்.
தந்தையின் துக்கத்திலும், தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெற்ற ஹர்ஷித் ராஜலிங்கத்துக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது குறித்து ஹர்ஷித் ராஜலிங்கம் மேலும் கூறியதாவது: "கணினி மென்பொருள் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் ஆசை. அதை நிறைவேற்ற நான் தொடர்ந்து முயற்சி செய்வேன்." என்றார்.
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.91 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடந்தது.
தொடர்ந்து தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான பணிகளை தேர்வுத் துறை மேற்கொண்டது. இதனால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பள்ளி மாணவ மாணவிகள் tnresults.nic.in, dge.tn.gov.in, results.digilocker.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்ககத்தில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இயக்கக செயலாளர் சந்திரமோகன் நேற்று வெளியிட்டார். அதில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 97 சதவீதம் பேரும், மாணவர்கள் 93.19 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் மாணவர்களின் தேர்ச்சியை விட மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 3.82 சதவீதம் அதிகம். தமிழகத்தில் அதிக தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக ஈரோடு மாவட்டத்தில் 98.87% பெற்றுள்ளது.
இரண்டாவது இடத்தில் சிவகங்கை மாவட்டம் 98.05 சதவீதம், 3ஆவது இடத்தில் குமரி மாவட்டத்தில் 97.63 சதவீதமும் நெல்லை 97.54 சதவீதமும் திருச்சி 97.50 சதவீதமும் பெற்று முதல் 5 இடங்களை பெற்றுள்ளது.
அது போல் தமிழகத்தில் முதல் மாணவராக பெரும்பாக்கத்தைச் சேர்ந்த அபினேஷ், 600- 598 மதிப்பெண்களை பெற்றுள்ளார். இவர்தான் தமிழகத்தின் முதல் மாணவனாவார். இவர் தமிழில் 99 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும் , பொருளாதாரம், வணிகவியல், கணக்கியல், business maths stats ஆகிய பாடப்பிரிவுகளில் தலா 100 மதிப்பெண்களை பெற்று மொத்தம் 598 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications