சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை...மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி..காரணம் மன உளைச்சலா?
சென்னை: மெட்ராஸ் ஐஐடி வளாகத்தில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டூர்புரம் காவல்நிலைய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயற்சி செய்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவர் பெயர் ஸ்ரீவன் சன்னி என்பதாகும். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீவன் சன்னி, விடுதியில் தங்கி முதுநிலை ஆராய்ச்சி 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். மன உளைச்சலுடன் அவர் இருந்ததே தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
படிப்பில் சிறந்து விளங்கியவரான ஸ்ரீவன் வன்னி, தற்கொலை செய்து கொண்டது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 6 மணி அளவில் அவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மாணவர் ஸ்ரீவன் சன்னியின் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அதேபோல மற்றொரு மாணவரும் தற்கொலை முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2016ல் தொடங்கி தற்போது வரை 12 தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016ம் ஆண்டு மட்டும் 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 3 பேர் மாணவர்கள். சென்னை ஐஐடியில் கடந்த 21ஆம் ஆண்டு பாதி எரிந்த நிலையில் ஒரு மாணவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில், கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பதும், அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதே போன்று கடந்த 2018ஆம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவர், வருகை பதிவேட்டில் பற்றாக்குறை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.
மேலும் ஒரு ஆய்வு மாணவர், உத்தரபிரதேசத்தை சேர்ந்த முதுகலை தொழில்நுட்ப மாணவர் ஆகியோர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. தனிப்பட்ட காரணங்களுக்காக பேராசிரியர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டில் கேரளாவை சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஒடிசா மாணவர் தற்கொலை நடந்துள்ளது. 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை 12 பேர் தற்கொலை செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர் இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனமான சென்னை ஐஐடியில் தற்கொலைகள் நிகழ்ந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை மட்டுமே தீர்வாகாது என்பதை மாணவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.












Click it and Unblock the Notifications