கோவில் நிதியில் கல்லூரி கட்டாதீங்க! எடப்பாடிக்கே சிக்கலாகிய பேச்சு! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்
சென்னை: எடப்பாடி பழனிசாமி பேச்சை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். சென்னையில் கபாலீஸ்வரர் கல்லூரி மாணவர்கள் கண்டன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காலை முதல் 100க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கோவில் நிதியை வைத்து கல்லூரிகள் கட்டுவதை எதிர்த்து எடப்பாடி பேசியதை கண்டித்து போராட்டம் நடக்கிறது.

தடுக்காதே.. தடுக்காதே.. கோவில் நிதியை வைத்து கல்லூரி கட்டுவதை தடுக்காதே என்று கடுமையாக பேசி எடப்பாடிக்கு எதிராக மாணவர்கள், பெற்றோர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
சிக்கலாக மாறிய எடப்பாடி பேச்சு
கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவதை பாஜக கடுமையாக எதிர்த்து வருகின்றனர். வலதுசாரி அமைப்புகள் இதை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அறநிலையத்துறை விதிப்படி கோவில் பணத்தை அதாவது அறநிலையத்துறை பணத்தை கல்லூரி கட்டுவது உட்பட ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த முடியும். ஆனால் இதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்கிறது. இந்த நிலையில் தற்போது எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதை எதிர்த்துள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சில், கோவிலை பார்த்தாலே திமுகவிற்கு கண்ணு உறுத்துது. அதை பற்றி நான் சொல்ல கூடாது. சொன்னால் வேறு மாதிரி ஆகிவிடும். நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கோவிலில் மக்கள் பணம் போடுகிறார்கள். கோவிலை விரிவுபடுத்த பணம் போடுகிறார்கள். மக்கள் கோயில்களின் உண்டியலில் பணம் செலுத்துவது, கோயிலை மேம்படுத்தவே. ஆனால், திமுக அரசு அனைத்து கல்லூரிகளையும் அரசுப் பணத்தில் கட்டாமல், அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவது எந்த விதத்தில் நியாயம் என்றும் இது ஒரு சதிச்செயல் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. மக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள்.
கல்விக்கு செலவு செய்ய வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால், அதை அரசுப் பணத்தில் செய்ய வேண்டும். கோயில் பணத்தை கல்விக்காக செலவு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது பணம் இருப்பது திமுகவினரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்றும், அது அவர்களின் கண்களை உறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்களுக்கு கோயில்கள் மீது விருப்பம் இல்லாத காரணத்தால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டப்படுகிறது.
அதிமுக ஆட்சியில் நாங்கள் கோவில் கட்டவில்லையா? சொல்லுங்கள். 10 கல்லூரிகளுக்கு மேல் கட்டி உள்ளோம். ஆனால் நீங்கள் அப்படியா கட்டுகிறீர்கள். பல மக்கள் எங்களிடம் இந்த புகார்களை வைத்துள்ளனர். கல்வி வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது முக்கியம். கல்வி என்பது கண் மாதிரி. அதை அரசு கட்ட வேண்டும். அரசு சொந்த பணத்தில் கட்ட வேண்டும். கோவில் பணத்தில் கட்ட கூடாது. சொந்த பணத்தில் கட்டாமல் எப்படி கோவில் பணத்தில் கட்டுகிறீர்கள்.
இப்படி ஒரு அரசாங்கம் தேவையா? இதைத்தான் மக்கள் சதிச்செயலாக பார்க்கின்றனர். இப்படி ஒரு அரசாங்கம் தேவையா என்று நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications