‛‛தனித்திறமையை வளர்க்க கஷ்டப்படும் பெண்கள்’’.. ஏன் தெரியுமா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..
சென்னை: வாழ்க்கை சூழலுக்கும், வேலைக்கும் போதுமான நேரத்தை ஒதுக்கிவிடுவதால், தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியவில்லை என்று வேலை செய்யும் பெண்களில் 70 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
கடந்த காலங்களை காட்டிலும் தற்போது பெண்கள் அதிகமாக வெளியில் வர தொடங்கியுள்ளனர். நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் பெண்கள் அதிக அளவில் பங்கெடுத்து வருகிறார்கள். ஆனால் ஒட்டுமொத்த மக்கள் தொகையுடன் இதை ஒப்பிடும்போது, ஆண்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறதா? என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.

அப்படி வாய்ப்புகள் கிடைத்தாலும், அதை பயன்படுத்திக்கொள்ள அங்கு பெண்கள் இருப்பதில்லை. இதற்கான காரணம் வாழ்க்கை சூழல்தான் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களின் தனி திறமைகளை வளர்த்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், குடும்பத்திற்கும், வேலைக்கும் போதுமான அளவு நேரம் ஒதுக்குவதால் தங்களது திறமைகளை மேம்படுத்திக்கொள்ள முடிவதில்லை என 70 சதவித பெண்கள் கூறுகின்றனர்.
Hero Vired எனும் அய்வு நிறுவனம் வேலைக்கு செல்லும் 2 லட்சம் பெண்களிடத்தில் 'இந்தியாவில் நவீன பணியிடங்களில் பெண்கள்' எனும் தலைப்பில் ஆய்வை மேற்கொண்டிருந்தது. தனித்திறமையை அதிகரிப்பதில் எது தடையாக இருக்கிறது? என்பதே இந்த ஆய்வின் கருப்பொருளாக இருந்தது. ஆய்வின் முடிவின்படி 69 சதவிகித பெண்கள் தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள நேரமின்மையே முக்கிய காரணமாக இருப்பதாக கூறியுள்ளனர்.
77 சதவிகிதம் பெண்கள், முந்தை காலகட்டங்களை விட தற்போது நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் அதிக அளவு பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளனர். அதேபோல பெண்கள் தலைமை பொறுப்புகளுக்கு வருவது நல்ல விஷயம் என்றும் 78 சதவிகித பெண்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வில் சில முக்கியமான விஷயங்களையும் பெண்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதாவது, பிரசவம், நீண்ட கால மருத்துவ விடுப்புக்கு பின்னர் பணிக்கு வரும் பெண்களுக்கு 'சிறப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்' வேண்டும் என்று 55 சதவிகிதம் பெண்கள் கூறியுள்ளனர்.
இப்படியான திட்டங்கள் ஏன் வேண்டும் என்றும் அவர்கள் விவரித்துள்ளனர். அதாவது, நீண்ட நாட்களுக்கு பிறகு வேலைக்கு வரும்போது, தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இருந்து துண்டிக்கப்பட்ட உணர்வு ஏற்படுகிறது என்றும், தங்களது திறன்கள் காலாவதியாகிவிட்டது என்றும் அச்சமடைகின்றனர். எனவேதான் சிறப்பு திட்டங்களை கேட்கின்றனர்.
அதேபோல நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு வரும் பெண்களுக்கு, ஏற்கெனவே செய்த வேலை செட்டாகமல் போய்விடுகிறது. எனவே புதிய வேலையை தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுவதால் மன உளைச்சலுக்கு அவர்கள் உள்ளாகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.












Click it and Unblock the Notifications