பொங்கல் அன்று சி.ஏ.தேர்வு! இந்த எத்தனை முறை சொன்னாலும் மத்திய அரசு திருந்தாது- சு.வெங்கடேசன்
சென்னை: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகளை வைத்து தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை மத்திய அரசு கைவிட வேண்டும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் திருநாள் அன்று தேர்வுகள். எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதுமில்லை. ஒன்றிய அரசே, தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ்ப் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுக்க சார்டர்ட் அக்கவுன்டன்ட் தேர்வு (பட்டயக் கணக்காயர்) நடத்தப்படுகிறது. அதாவது அடுத்த ஆண்டு பவுண்டேஷன் தேர்வுக்கான அட்டவணையை தி சார்ட்டர்ட் அக்கவுன்ட்டன்ட் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது.
அதன்படி 4 தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதில் அக்கவுண்டிங் தேர்வானது ஜனவரி 12 ம் தேதியும் பிசினஸ் லாஸ் தேர்வு ஜன 14 ஆம் தேதியும் திறனறித் தேர்வு ஜன 16 ஆம் தேதியும் பிசினஸ் எக்கனாமிக்ஸ் தேர்வு ஜன 18ஆம் தேதியும் நடத்தப்படுகிறது.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அது போல் திருவள்ளுவர் தினமானது ஜனவரி 15ஆம் தேதியும் உழவர் திருநாள் 16 ஆம் தேதியும் கொண்டாடப்படுகிறது. எனவே தமிழகத்தில் போகி பண்டியையான ஜனவரி 13 ஆம் தேதி முதல் ஜனவரி 16-ஆம் தேதி வரை விடுமுறையாகும்.

இந்த விடுமுறை நாளில் இது போல் சி.ஏ.தேர்வு வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சு.வெங்கடேசன் கண்டித்துள்ளார். மேலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பும் இதே போல் எஸ்பிஐ வங்கித் தேர்வையும் பொங்கல் பண்டிகை அன்றே மத்திய அரசு நடத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே பொங்கல் பண்டிகை அன்று வைக்கப்பட்டுள்ள தேர்வை மாற்றி வைக்குமாறு சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.













Click it and Unblock the Notifications