12 மணி நேரம்.. சென்னை பீச் - எழும்பூர் இடையே நாளை ரயில் சேவை ரத்து.. ரயில்வே புதிய அறிவிப்பு
சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 மணியில் இருந்து இரவு 7.45 மணி வரை சென்னை கடற்கரை - எழும்பூர் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை தாம்பரத்தில் யார்டு பணிகள் காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்ட நிலையில் நாளை கடற்கரை - எழும்பூர் இடையேயும் ரயில் சேவை இருக்காது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் பயணிகள் தங்களின் பயண தேவைக்கு மின்சார ரயில்களை பெரிதும் நம்பியுள்ளனர்.
புறநகர் பகுதி மக்கள் சென்னை நகருக்குள் வருவதற்கு முக்கிய போக்குவரத்தாக இருப்பது மின்சார ரயில்கள்தான். இதனால் சென்னை மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.

மின்சார ரயில் சேவை: பீக் நேரங்களில் சில நிமிடங்கள் தாமதம் ஆக ரயில் வந்தால் கூட ரயில்வே பிளாட்பார்மில் நிற்க முடியாத அளவிற்கு பயணிகள் கூட்டம் அலைமோதும். குறைவான கட்டணத்தில் காலதாமதம் இன்றி விரைவாக செல்ல முடியும் என்பதால் ரயில் சேவையை பயணிகள் பெரிதும் சார்ந்துள்ளனர்.
நாளை ரயில்கள் ரத்து: மின்சார ரயில்களை பொறுத்தவரையில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் ரயில்களை பாதுகாப்பாக இயக்க அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 23ஆம் தேதி முதல் தாம்பரம் பணிமனையில் சிக்னல் வேலை மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

எனவே, இன்று காலை 9.20 மணி முதல் கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு, கடற்கரை - அரக்கோணம், திருமால்பூர் - கடற்கரை, காஞ்சிபுரம் - கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த 55 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. புறநகர் பகுதியில் இருந்து சென்னை நகருக்குள் வரும் பயணிகள் போதிய ரயில்கள் இல்லாததால் திண்டாடிப்போனார்கள்..
12 மணி நேரம்: இந்த நிலையில், நாளையும் ரயில்கள் ரத்து தொடர்பாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 7.45 மணி முதல் இரவு 7.45 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக எழும்பூரில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாவரத்திற்கு மட்டும்: தாம்பரம் ரயில்வே யார்டு பணிகளுக்காக காலை 10 மணி முதல் பகல் 1 மணி மற்றும் இரவு 10.30 க்கு மேல் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே தெற்கு ரயில்வே கூறியிருந்த நிலையில் கூடுதலாக தற்போது சென்னை கடற்கரையில் இருந்து எழும்பூர் வரையிலான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இதன்படி, காலை 8 மணியில் இருந்து எழும்பூரில் இருந்து புறநகர் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணியில் இருந்து எழும்பூரில் இருந்து பல்லாவரத்திற்கு மட்டுமே ரயில்கள் இயக்கப்படும் எனவும், 12.50 மணிக்கு பிறகே தாம்பரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













Click it and Unblock the Notifications