அலறிய சென்னை மெட்ரோ பயணிகள்.. ரயிலில் தீப்பொறி.. உடனே நிறுத்தி கோளாறை சரி செய்த நிர்வாகம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சத்தத்துடன் தீப்பொறி கிளம்பியதால் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை சீராகியுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்று மாலை பீக் ஹவர் நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து விம்கோ நகர் வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
சென்னை விம்கோ நகர்- விமான நிலையம் இடையே நீல நிற வழித்தட மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்று 300 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில் சென்னை ஐகோர்ட் நிறுத்தம் வந்த போது பயங்கர சத்தத்துடன் தீப்பொறி கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பாதையில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அந்த ரயிலில் இருந்த சுமார் 300 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். உடனடியாக தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோளாறு சரிசெய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை சீராக இயங்கத் தொடங்கியுள்ளது.
"தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மெட்ரோ மற்றும் நீல வழித்தடத்தில் உள்ள ஏர்போர்ட் மெட்ரோ நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பச்சை நிற வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில்களில் எந்தவித பிரச்சனையும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications