அரசுடன் நடத்திய பேச்சில் உடன்பாடு.. சென்னை மாநகர பஸ் ஸ்டிரைக் வாபஸ்.. மக்கள் நிம்மதி
Recommended Video
சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து தொழிலாளர்கள் காலை முதல் நடத்தி வந்த ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எடப்பட்டதால் தொழிற்சங்கத்தினர் தங்களது ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றுள்ளனர்
முன்னதாக தலைநகர் சென்னையில் பெரும்பாலான போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் திடீர் ஸ்டிரைக் காரணமாக, சென்னையில் பெரும்பான்மையான மாநகர பேருந்துகள் காலை முதல் ஓடவில்லை.

ஜூன் மாத சம்பளத்தை முழுமையாக வழங்காததை கண்டித்து, போக்குவரத்து தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். தலைநகர் சென்னையில் உள்ள கிண்டி, தாம்பரம், பிராட்வே, அம்பத்தூர், அடையாறு, தி.நகர், வடபழனி, பெரம்பூர், குன்றத்தூர் உள்ளிட்ட பணிமனைகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, சென்னை நகரில் காலையில் இயக்கப்பட வேண்டிய சுமார் 500-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு செல்வோரும் போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் கடும் அவதியடைந்தனர்.

இதனிடையே இன்று இரவுக்குள் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு முழு ஊதியம் தரப்படும் என, போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்தது. மேலும் குறைவாக ஊதியம் தரப்படுமென்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம், என்றும் போக்குவரத்து துறை கூறியது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று வங்கி விடுமுறை என்பதால் தான் மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இன்று வேலைநாள் என்பதால் மாலைக்குள் போக்குவரத்து ஊழியர்களின் முழு ஊதியமும் அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என உறுதி கூறினார்.எனினும் சாதானமடைய மறுத்த போக்குவரத்து ஊழியர்களால் மாநகரம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்டமைப்பினருடன், எம்டிசி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது இதனையடுத்து சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களின் திடீர் ஸ்டிரைக் வாபஸ் பெறப்படுவதாக தொமுச பொருளாளர் நடராஜன் அறிவித்தார்.
ஜூன் மாத ஊதியத்தில் நிலுவையில் உள்ள 38% தொகை இன்று மாலைக்குள் செலுத்தப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications