எப்படியாவது குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன்.. விஜயகாந்த் வேதனை
சென்னை: சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம், குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க முடியாதது வேதனை அளிக்கிறது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தை சுர்ஜித் இறந்த நிலையில், சடலமாக மீட்டெடுக்கப்பட்ட செய்தியறிந்து மிகவும் துயரமுற்றேன். எப்படியாவது குழந்தை சுர்ஜித் மீட்கப்பட்டு விடுவான் என்று நம்பினேன். இறைவனை வேண்டினேன். உலகமே குழந்தை சுர்ஜித்தை மீட்க பிரார்த்தனை செய்தது
ஆனாலும் யாரும் எதிர்பாராத வகையில் இத்தகைய துயர செய்தி நம் அனைவருக்குமே அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை சுர்ஜித்தை மீட்க பாடுபட்ட அனைவரின் முயற்சிகளும் பாராட்டத்தக்கது இருப்பினும் குழந்தை சுர்ஜித் உயிருடன் மீட்க முடியாமல் போனது வேதனை அளிக்கிறது.
இத்துயரச் சம்பவத்தை பாடமாக கொண்டு மக்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி உடனடியாக, திறந்த நிலையில் உள்ள அனைத்து ஆழ்துளை கிணறுகளையும் மூட வேண்டும். சுர்ஜித்தை இழந்துவாடும் அவரது பெற்றோர், உற்றார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். குழந்தை சுஜித் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என விஜயகாந்த் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் போராட்டம் முடிவுக்கு வருமா.. இன்று இரவு அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சுவார்த்தை
இதனிடையே விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.எனவே திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் அல்லது ஆழ்துளைகளை மூடும் 'கேப்' கொண்டு மூட வேண்டும்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.