Summer Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் கோடை விடுமுறை! ஆனால், ஆசிரியர்களுக்கு மட்டும் ஷாக் நியூஸ்!
சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. இதையொட்டி மாணவர்கள் விடுமுறை காலத்தில் பாதுகாப்பாக இருக்க பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய முக்கிய அறிவுறுத்தல்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, வழக்கத்தை விட முன்கூட்டியே பள்ளித் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன்படி, 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் வியாழக்கிழமை முடிவடைகின்றன.

இறுதி நாளில் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்பதால், பெற்றோர் கவனிக்க வேண்டிய சில முக்கிய ஆலோசனைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதால், குழந்தைகளை கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தனியாக குளிக்க அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கோடை வெயில் அதிகமாக இருக்கும் நிலையில், வெளியில் விளையாடும் போது குழந்தைகள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதிய நேரங்களில் வெயில் தீவிரமாக இருக்கும் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்கச் சொல்ல வேண்டும் எனவும் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை காலங்களில் குழந்தைகள் அதிக நேரம் கைப்பேசி மற்றும் தொலைக்காட்சி பயன்படுத்துவதை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அதற்கு பதிலாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடுதல், ஒன்றாக உணவருந்துதல், இசை போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுதல் மூலம் சமூக உறவுகளை வளர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நலனை பாதுகாக்க, சத்தான மற்றும் சமச்சீரான உணவுகளை வழங்குவது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கோடை காலத்திற்கு ஏற்ற பழவகைகள் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக, மாணவர்களை அருகிலுள்ள பொது நூலகங்களுக்கு அழைத்து சென்று தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஆர்வத்திற்கு ஏற்ப கதைகள், பொது அறிவு நூல்கள் மற்றும் சிறுவர் இலக்கியங்களைப் படிக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல் இசை, நடனம், ஓவியம் போன்ற கலைகளில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விடுமுறை காலத்தில் அவற்றை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தினமும் இரு முறை பல் துலக்குதல், சுத்தமாக குளித்தல், பெரியவர்களை மதித்து உதவுதல் போன்ற நல்ல பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்பிக்கவும் பெற்றோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் உடனடியாக விடுமுறைக்கு செல்ல முடியாது என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பள்ளியின் இறுதி வேலைநாளான ஏப்ரல் 25ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும். அந்த காலத்தில் விடைத்தாள் மதிப்பீடு, மாணவர் சேர்க்கை உள்ளிட்ட நிர்வாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications