தமிழகத்தில் ஞாயிறு ஊரடங்கு.. மீன் வாங்க இன்றே கூட்டமாக கிளம்பிய அசைவ பிரியர்கள்! விலை கிடுகிடு
சென்னை: நாளை லாக்டவுன் காரணமாக அசைவ பிரியர்கள் பலரும் இன்றே தங்களுக்கு தேவையான இறைச்சிகளை வாங்கி வைத்துக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் மீன் மார்கெட்களில் வழக்கத்தை விட இன்று கூட்டம் நிரம்பி வழிவதை காண முடிகிறது.
வாடிக்கையாளர்களின் வருகையாலும் போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதாலும் மீன்களின் விலையும் இன்று கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

நாளை லாக்டவுன்
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் தமிழக அரசு நாளை (ஞாயிற்றுகிழமை) முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதையடுத்து சென்னை காசிமேட்டில் மீன்கள் வாங்க பொது மக்களும் வியாபாரிகளும் இன்று காலையிலேயே குவிந்துவிட்டனர். மூன்றாவது வாரமாக ஞாயிற்றுகிழமையான நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

காலை 6 மணி
இரவு ஒரு மணி முதல் காலை 6 மணி வரை விசைபடகு உரிமையாளர்கள் தங்களின் மீன்களை விற்று கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளதால் அந்த நேரத்தில் சில்லறை வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதியில்லை. இதனிடையே காலை 6 மணிக்கு பிறகு மீன் விற்பனை சில்லறை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் குவிந்தனர்

காசிமேடு மார்கெட்
காசிமேடு மீன் பிடி சங்கத்தின் சார்பாக அங்குள்ள ஒலி பெருக்கி மூலம் முககவசம் அணியுமாறும் தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறும் வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் பொதுமக்களில் பலரும் அதனை முழுமையாக கடைபிடித்தது போல் தெரியவில்லை. இதனிடையே அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், முகக்கவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் அபராதம் வசூலித்தனர்.

மீன்கள் விலை
மீன்களின் விலைகளை பொறுத்தவரை இன்று சற்று அதிக அளவிலையே இருந்ததை காண முடிந்தது. சங்கரா மீன் கிலோ 600 ரூபாய்கும், வஞ்சிரம் மீன் கிலோ 1200 ரூபாய்கும் விலை போனது. இதேபோல் டைகர் இறால் கிலோ 1500 ரூபாய்கும், நண்டு கிலோ 500 ரூபாய்கும் விற்பனையானது. மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் கூட அதனை பொருட்படுத்தாமல் அசைவ பிரியர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications