வந்தாச்சு.. கிளாம்பாக்கம் பஸ் நிலையம் திறப்பு எப்போது.. அறிவித்தார் அமைச்சர் முத்துசாமி
சென்னை: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வண்டலூர் பேருந்து நிலையம் திறக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் ரூ 400 கோடியில் கிளாம்பாக்கத்தில் பேருந்து முனைய கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார்.
சென்னை பூக்கடையில் பேருந்து நிலையம் இயங்கி வந்த நிலையில் இடப்பற்றாக்குறை காரணமாக கோயம்பேடு பேருந்து நிலையம் 103 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு நாள் ஒன்றுக்கு 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை பயணிகள் வந்து செல்கிறார்கள்.

சென்னை மாநகர பேருந்து
சென்னை மாநகர பேருந்துகளும், வெளியூர் செல்லும், வெளிமாநிலம் செல்லும் பேருந்துகளும் இங்கிருந்தும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் பண்டிகை காலங்களில் பூந்தமல்லி சாலை முழுவதும் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்தது.

வழித்தடங்கள்
இதையடுத்து ஒவ்வொரு மார்க்க வழித்தடங்களுக்கென பேருந்து நிலையங்கள் பொங்கல், தீபாவளி பண்டிகையின் போது பிரித்து இயக்கப்படுகின்றன. அந்த வகையில் ஆரணி, வேலூர், ஆற்காடு, காஞ்சிபுரம், தருமபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல பூந்தமல்லியில் தற்காலிக பேருந்து அமைக்கப்படுகிறது.

5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம்
இது போல் மற்ற ஊர்களுக்கு செல்ல வண்டலூர், தாம்பரம், மாதவரம், கே கே நகர் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு பண்டிகை கால கூட்ட நெரிசல் சமாளிக்கப்படுகிறது. மேலும் கோயம்பேடு பகுதிகளில் மெட்ரோ மேம்பால பணிகளாலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கென தனி பேருந்து நிலையம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் தயாராகி வருகிறது.

ரூ 400 கோடி
இந்த பேருந்து நிலையம் ரூ 400 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் 2018 இல் திறக்கப்படும் என சொல்லப்பட்டது. எனினும் கட்டுமான பணிகள் இன்னும் முடியவில்லை. இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்துள்ளார். பொங்கல் கழித்து பிப்ரவரி மாதம் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும். இதனால் தென் மாவட்டங்களுக்குச் செல்வது எளிதாக்கப்படும்.












Click it and Unblock the Notifications