ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. பொதுமக்கள் செம குஷி..!
தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
சென்னை: முக்கிய அறிவிப்பு ஒன்று தமிழக ரேஷன் கடைகளுக்கு பறந்துள்ளது.. இதையடுத்து ரேஷன் அட்டைதாரர்கள் குஷியில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக நன்மை அடைந்து வருகின்றனர்.
அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன.. மற்றொரு புறம், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு மேற்கொண்டு வருகிறது.

கையிருப்பு என்ன?
எனினும், சில இடங்களில் நியாய விலைக் கடைகளில் உள்ள தகவல் பலகைகளில் அத்தியாவசியப் பொருட்கள் என்னென்ன உள்ளன? அப்பொருட்களின் கையிருப்பு என்ன? அவைகளின் விலைகள் என்ன? என்பது குறித்து நோட்டீஸ்போர்டில் தெளிவாக குறித்து வைக்க வேண்டும் என்பது விதிமுறை.. ஆனால், பல ரேஷன் கடைகளில் இந்த நடைமுறையை யாரும் சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை.. இது தொடர்பாக புகார்களை மக்களே அரசுக்கு கொண்டு சென்றனர்.

தமிழக அரசு
இந்நிலையில்தான் அதிரடி உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. ரேஷன் கடைகளில் உள்ள நோட்டீஸ் தகவல் பலகைகளில், பொருட்களின் கையிருப்பு விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு, விலையையும் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளது.. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் எழுதி உள்ள கடிதத்தில் உள்ளதாவது:

தகவல் பலகைகள்
குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெறக்கூடிய புகார்கள் அடிப்படையிலும், நியாய விலைக் கடைகள் தணிக்கையின் போது அறியக் கூடிய விவரங்கள் அடிப்படையிலும், தகவல் பலகைகள் நியாய விலைக் கடைகளில் சரிவர பராமரிக்கப்படுவதில்லை என தெரிய வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே வழங்கிய அறிவுரைகளோடு, மேலும் சில அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன.

விவரங்கள்
அதாவது, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தகவல் பலகைகள் கீழ்காணும் விவரங்களை உள்ளடக்கி, குடும்ப அட்டைதாரர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், காட்சிப்படுத்தப்பட வேண்டும். இன்றியமையாப் பண்டங்கள் இருப்பு விவரம் கடைப் பணியாளரால் தினசரி பூர்த்தி செய்து காட்சிப்படுத்தப்பட வேண்டும். அறிவிப்பு பலகைகளில், நியாய விலைக் கடையின் வேலை நேரம், இன்றியமையாப் பண்டங்கள் (சிறப்பு அத்தியாவசியப் பண்டங்கள் உட்பட) இருப்பு விவரம், ஆரம்ப இருப்பு பெறப்பட்டது, வினியோகம் செய்யப்பட்டது, இறுதி இருப்பு உள்ளிட்ட விவரங்கள் தினசரி பராமரிக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு
இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படும் அளவு மற்றும் அவற்றின் விற்பனை விலை குறித்த தகவல் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், நியாய விலை கடைகள் தொடர்பாக புகார் தெரிவிக்கக் கூடிய உயர் அலுவலர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் செல்பேசி எண்கள் இடம் பெற்றிக்க வேண்டும். உணவுத் துறை அமைச்சர் 044-2567 1427, உணவுத் துறை செயலாளர் 044-2567 2224, உணவுப் பொருள் வழங்கல் ஆணையாளர் 044-2859 2255 உள்ளிட்டோரின் எண்கள் இடம் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications