59 சீட் பாஜக டிமாண்டு? B.L. சந்தோஷின் 20% கணக்கு! கமலாலயத்தில் அடிபட்ட அண்ணாமலை பெயர்.. என்ன நடந்தது
சென்னை: தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுகவை மீண்டும் இணைத்த கையோடு, டிடிவி தினகரனையும் உள்ளடக்கிய ஒரு பலமான கூட்டணியை பாஜக உருவாக்கியுள்ளது.. இந்நிலையில், சென்னையில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் நேற்றைய தினம் ஆலோசனை கூட்டம் நடந்துள்ளது.. இதுகுறித்த சில தகவல்கள் தற்போது வட்டமடித்து வருகின்றன.
தமிழக பாஜகவில் ஏற்பட்டுள்ள சில உட்கட்சி மாற்றங்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தமிழக பாஜகவின் முகமாகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, திடீரென தனக்கு வழங்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து விலகியது கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியுள்ளது.

அண்ணாமலை விலகல்
தன்னுடைய தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் ஒதுங்கியிருந்தாலும், அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவியவண்ணம் உள்ளன..
இதனால் நிலைமை மோசமாவதை உணர்ந்த பி.எல். சந்தோஷ், உடனடியாக சென்னைக்கு வந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
20 சதவீதம் தொகுதி?
இந்த கூட்டத்தில் 20% என்ற அளவில் தொகுதிகளை கேட்டுப் பெறுவோம், இதனால் எதிர்பார்ப்பதைவிட அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என பி.எல்.சந்தோஷ் சொன்னதாகவும், அந்தவகையில் 46 தொகுதிகளில் பாஜக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் நேற்றைய செய்திகள் பரபரபத்தன..
ஆனால் இன்று வேறு மாதிரியான தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதாவது நேற்றைய ஆலோசனையில் தொகுதிப் பங்கீடு குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
59 தொகுதிகளுக்கு சான்ஸ்?
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக பெற்ற வாக்கு சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் 20 சதவீத இடங்களைக் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த 20 சதவீத கணக்கின்படி பார்த்தால், மொத்தம் 59 தொகுதிகளை பாஜக குறிவைப்பதாக தெரிகிறது..
இதற்கான வேலைகளை இப்போதே தொடங்குமாறும், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திமுக அரசின் ஊழல் புகார்களை முன்வைத்து வீடு வீடாகப் பிரச்சாரம் செய்யுமாறும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில் உரையாற்றிய பி.எல். சந்தோஷ், கட்சி நிர்வாகிகளிடம் மிகவும் கறாராக நடந்து கொண்டதாக தெரிகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால், தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் ஈகோவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினாராம்..
அண்ணாமலை குறித்த பேச்சு
அண்ணாமலையின் திடீர் விலகல் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், அவர் மீண்டும் பழைய அரசியல் பாணிக்கு மாற வேண்டும் என்றும் சில நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.. எனினும், அண்ணாமலை குறித்த விவகாரத்தை டெல்லி தலைமை பார்த்துக் கொள்ளும் என்று கூறி பி.எல். சந்தோஷ் அந்த விவாதத்துக்கு அப்போதே முற்றுப்புள்ளி வைத்தாராம்..
அண்ணாமலைக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் தற்போது தமிழிசை, எல். முருகன் மற்றும் வானதி சீனிவாசன் போன்ற சீனியர்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.
அதிமுக சீட் ஒதுக்குமா
எனினும், அதிமுகவிடம் 59 தொகுதிகளைப் பெறுவது பாஜகவிற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அதே சமயம், அண்ணாமலையின் தற்காலிக விலகல் மற்றும் சீனியர் தலைவர்களின் புதிய பொறுப்புகள் தமிழக பாஜகவின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்றே தெரிகிறது..
தேர்தல் நெருங்கும் வேளையில், கூட்டணியை வலுப்படுத்துவதும், தொகுதிப் பங்கீட்டைச் சுமூகமாக முடிப்பதும் பாஜகவின் பிரதான இலக்காக உள்ளது. அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் மற்றும் அவர் மீண்டும் களத்திற்கு வருவாரா என்பது குறித்த தெளிவான முடிவுகள் டெல்லி தலைமையின் கைகளிலேயே உள்ளது.












Click it and Unblock the Notifications