வாடகை வீட்டுதாரர்களுக்கு குஷி.. அபார்ட்மென்ட் வீடு வாங்குவோர் ஆவணங்களை பெற சூப்பர் வசதி.. இனி நிம்மதி
சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோருக்கு சூப்பர் வசதி செய்து தரப்பட்டுள்ளது.. இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆணையம் கொண்டுவந்துள்ள அதிரடி என்னென்ன தெரியுமா?
இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் விரிவாகவே செயல்படுத்தப்பட்டது...

ரியல் எஸ்டேட் துறையில் பெருமளவில் முதலீடுகளை ஈர்க்கவும், ஊக்குவிக்கவும், வாங்குபவர் மற்றும் விற்பவரிடையே வெளிப்படை தன்மையுடன் ரியல் எஸ்டேட் வணிகத்தின் பரிவர்த்தனைகளையும், செயல்பாடுகளையும், நெறிமுறைபடுத்தவும், ஒழுங்குபடுத்தவும், வர்த்தகத்தை மேம்படுத்தவும் இந்த ஆணையம் கொண்டுவரப்பட்டது.
ரியல் எஸ்டேட்: அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 22 ஜூன் 2017 முதல் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் செயல்படுகிறது... இதில் ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்களால் அபிவிருத்தி செய்யப்படும் எட்டுக்கும் மேற்பட்ட யூனிட்கள் (அலகுகள்) அல்லது 500 சதுர மீட்டருக்கு மேல் நிலப் பரப்பு கொண்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பது சட்டமாகும்..
ரியல் எஸ்டேட் சட்டத்தின்படி 5381 சதுரடி அல்லது அதற்கு மேற்பட்ட நில பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமான திட்டங்களை, இந்த ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும்...
சிக்கல்கள்: இந்த ஆணையம் ஆரம்பித்தபோது, கட்டுமான திட்ட ஆவணங்கள், "மேனுவல்" முறையில் பதிவு செய்யப்பட்டன. எனவே, கட்டுமான நிறுவனங்கள் காகித வடிவில் வழங்கும் இந்த ஆவணங்களை, வெப்சைட்களில் பொது மக்கள் பார்வைக்கு வெளியிடுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.. அதனால், சில ஆவணங்களை மட்டும், ஸ்கேன் செய்து வெளியிடப்பட்டு வந்தன.
அதனால்தான், ஏற்கனவே, ஆன்லைன் வசதி கொண்டுவரப்பட்டது... தீர்ப்பாயத்துக்கு என தனியாக, www.tnreat.tn.gov.in/ என்ற பெயரில் புதிய இணையதளம் சமீபத்தில் துவங்கப்பட்டது.. ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு வழக்குகள் பட்டியல், உத்தரவுகள் குறித்த விபரங்களை, பொதுமக்கள் இத்தளத்தின் வாயிலாக எளிதாக அறிய முடியும். அதேபோல, அனைத்து ஆவணங்களையும் இந்த வெப்சைட்டில் பதிவேற்றப்பட்டும் வருகிறது. இந்த வசதியானது, வீடு வாங்குவோருக்கு பயனுள்ளதாக இருந்து வருகிறது.
அடுக்குமாடி குடியிருப்பு: இப்படிப்பட்ட சூழலில், அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களில் புதிதாக வீடு வாங்குவோர், கூடுதல் விபரங்கள் அறியும் வகையில் சிறப்பு வசதியை, ரியல் எஸ்டேட் ஆணையம் தற்போது ஏற்படுத்தி உள்ளது.
இதன்மூலம், ரியல் எஸ்டேட் ஆணையம், ஒவ்வொரு கட்டுமான திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்த இணையதளத்தில் வெளியிடுகிறது.
ஆணையம்: கட்டுமான திட்ட அனுமதி, வரைபடம், கட்டுமான பணி உரிமம், கார்பெட் ஏரியா விபரம், மண் பரிசோதனை அறிக்கை, கட்டிட அமைப்பியல் பொறியாளர் அறிக்கை, நிலம் தொடர்பான உரிமை ஆவணங்கள், வில்லங்க சான்றிதழ், கட்டிட உறுதி தன்மைக்கான சான்றிதழ், வடிவமைப்பு தொடர்பான வல்லுனரின் சான்றிதழ், கட்டுமான நிறுவனத்தின் கணக்கு அறிக்கை, வங்கிக் கணக்கு விபரம், கட்டுமான ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும், ரியல் எஸ்டேட் ஆணையம் இதில் வெளியிடுகிறது.
இதன்மூலம் புதிதாக வீடு வாங்குவோர், ரியல் எஸ்டேட் ஆணைய இணையதளம் வாயிலாக, இந்த ஆவணங்களின் பிரதிகளை எளிதாக பெற்று ஆய்வு செய்யலாம் என்றும், கட்டுமான நிறுவனங்கள் அளிக்கும் ஆவணங்களின் உண்மை தன்மையும், இதன் வாயிலாக உறுதி செய்யப்படுகிறது என்றும் கட்டுமான நிறுவனங்கள் தரப்பில் உறுதி கூறப்படுகிறது.
நம்பகத்தன்மை: தமிழக அரசின் இந்த அதிரடியானது, வீடு வாங்கும் மக்களுக்கு பேருதவியாக இருப்பதுடன், கட்டுமான நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கவும் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
கோரிக்கை: முன்னதாக, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டதற்கு பெயிரா தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தது. தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், இணையதளம் வாயிலாகவே எளிமையாக பதிவு செய்யப்படும் திட்டங்களுக்கு தான்தோன்றித்தனமாக இப்படி தன் இஷ்டத்திற்கு ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கான பதிவு கட்டணத்தை உயர்த்தாமல், ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு சங்கங்களை அழைத்து பேசி அவர்களின் கருத்துக்களை பெற்று, அதன் அடிப்படையில் நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தது இங்கு நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications