பறந்த ஆர்டர்.. டாஸ்மாக் பார்களை மூடும் உத்தரவுக்கு.. சென்னை ஹைகோர்ட் எடுத்த அதிரடியை பாருங்க
டாஸ்மாக் பார்களை மூட இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
சென்னை: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை மூட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு குறித்து சென்னை ஹைகோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகளின் இணைப்பில் உள்ள பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் பார்கள் மூடப்பட்டுள்ளதால், புதிய டெண்டருக்கு பதிலாக பழைய டெண்டர் நீட்டிக்க வேண்டும், நில உரிமையாளர்களின் தடையில்லா சான்றை கட்டாயப்படுத்தக் கூடாது போன்ற கோரிக்கைகளுடன் வழக்குகள் தொடரப்பட்டன.

டாஸ்மாக்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.சரவணன் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம் தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து டாஸ்மாக் பார்களை ஆறு மாதத்திற்குள்
மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். மேலும், 1937 தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் கீழ் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பதற்கு மட்டுமே அனுமதி உண்டு, மேலும், அங்கு வாங்கும் மதுபானங்களை வீடுகளிலோ அல்லது தனியான இடங்களிலோ அருந்தலாம்.

தின்பண்ட கடைகள்
ஆனால், மதுவிலக்கு சட்டப்படி மதுபான கடைகளோடு தின்பண்ட கடைகள் மற்றும் பார்கள் அமைப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது.. இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத்பண்டாரி , நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜரானார்.

இடைக்கால தடை
அவர் வாதிடும்போது, "வழக்கிற்கு அப்பாற்பட்டு இந்த உத்தரவை தனி நீதிபதி பிறப்பித்துள்ளார்.. மனுதாரர்கள் யாரும் பார்களை மூட வேண்டும் என்று கேட்கவில்லை.. அதனால், தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும், டாஸ்மாக் நிறுவனம் பார்களை நடத்த அதிகாரம் உள்ளது" என்றார்.. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, டாஸ்மாக் நிறுவனம் பார் நடத்த டெண்டரை கோரலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

அதிரடி உத்தரவு
மேலும், டாஸ்மாக் அருகே பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டுவர தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு வழக்கை ஏப்ரல் 26ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications