காக்கா-கழுகுக்கு குறி வெச்சுட்டோம்.. புத்தாண்டு நாளிலேயே விஜய்யை வம்புக்கு இழுத்த ரஜினி ரசிகர்கள்!
சென்னை: காக்கா, கழுகுக்கு குறி வெச்சுட்டோம்.. இறகுகளை வெட்டுவோம் என 2024-ம் ஆண்டின் முதல் நாளான புத்தாண்டு தினத்திலேயே நடிகர் விஜய்யை நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் வம்புக்கு இழுத்திருக்கின்றனர்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை முன்வைத்து நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ரசிகர்களிடையே நீண்டகாலமாக மோதல் நீடித்து வருகிறது. இதில் ரஜினிகாந்த், விஜய் இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களுடனான உரையாடலில் ஒருவரை ஒருவர் மறைமுகமாக தாக்கி பேசுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

ஜெயிலர் திரைப்பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில், காட்டுல பெரிய மிருகங்கள் எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை செய்யாது. காக்கா எல்லோரையும் தொந்தரவு செய்யும். கழுகு உயரப் பறக்கும்.. யாரையும் தொந்தரவு செய்யாது. நான் காக்கா, கழுகுன்னு சொன்ன உடனே இவரைத்தான் சொல்றேன்னு சோசியல் மீடியாவில் சொல்லுவாங்க. இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது இரண்டும் இல்லாத ஊரும் இல்லை.. நாம வேலையை பார்த்துகிட்டு நேராக போகனும் என்றார். ரஜினிகாந்தின் இந்த பேச்சு சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு முட்டி மோதும் நடிகர் விஜய்யை குறிவைத்துதான் என சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் வழக்கம் போல நடிகர் விஜய், குட்டிக் கதைகளை சொன்னார். அதில் ஒன்றுதான் காக்கா- கழுகு கதை. அந்த கதையில், வேட்டைக்கு போகும் இருவர் காக்கை-கழுகு, முயல், மான் ஆகியவற்றுக்கு குறி வைக்கின்றனர். இதில் யானைக்கு குறி வைக்கிற நபர்தான் மாஸானவர். ஏனெனில் பெரியதாக பார்த்து குறி வைத்ததால்தான் அவர் மாஸ். அது மாதிரி பெரிய விஷயங்களுக்கு ஆசைப்படனும் என குறிப்பிட்டிருந்தார் விஜய். அதாவது ரஜினிகாந்த் சொன்ன காக்கா- கழுகு கதை பாணியில் குட்டி கதை சொல்லி அவருக்கு பதிலடி தந்திருந்தார் நடிகர் விஜய்.
இந்த பஞ்சாயத்துகளின் பின்னணியில் சென்னையில் இன்று புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடு முன்பாக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். இதனால் வீட்டுக்குள்ளே கேட் அருகே நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து வாழ்த்துகளை தெரிவித்தார் ரஜினிகாந்த். இதனால் ரஜினி ரசிகர்கள் ரொம்பவே ஆனந்தமடைந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர்கள், காக்கா- கழுகு பிரச்சனை எல்லாம் பண்ணிகிட்டு இருக்காங்க.. ஒரு காக்கா இல்லை.. எத்தனை காக்கா வந்தாலும் பார்த்துக்கிறோம்.. எவனா இருந்தாலும் வாங்க பார்த்துக்கலாம்.. முடிஞ்சா மோதிக்கலாம்.. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் வாங்க..நாங்க பார்த்துக் கொள்கிறோம். குறி வெச்சாச்சு.. காக்காவுக்கு...இறகு எல்லாத்தையும் கட் பண்ணி விட்டுறோம் பார்த்துக்கங்க என பகிரங்கமாக விஜய்யை எச்சரித்தனர். புத்தாண்டின் தொடக்கத்திலேயே ரஜினிகாந்த்- விஜய் ரசிகர்கள் மோத தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications