எங்கய்யா நம்ம அஞ்சா நெஞ்சரை காணவில்லை.. ஆதரவாளர்கள் விரக்தி + வருத்தம்!
அழகிரியின் அடுத்த கட்டம் என்ன என தெரியாமல் ஆதரவாளர்கள் தவிக்கிறார்கள்.
சென்னை: மீ டூ விவகாரம், அமைச்சரின் பாலியல் புகார், 18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு என தமிழகமே ரணகளப்பட்டு கிடக்கும்போது," எங்கள் அஞ்சாநெஞ்சன் அழகிரியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று தெரியவில்லையே" என அவரது ஆதரவாளர்கள் வருத்தமும் ஆதங்கமும் தெரிவித்து வருகின்றனர்.
கருணாநிதியை ஆஸ்பத்திரியில் சேர்த்ததில் இருந்தே பரபரப்பாக காணப்பட்டார் அழகிரி. கருணாநிதி மறைந்தும்கூட மதுரைக்கும் சென்னைக்குமாக பறந்து கொண்டே இருந்தார்.
கலைஞரின் மகன்
"நான்தான் திமுக என்றார்... என்னிடம்தான் எல்லா ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் என்றார்.. என் தொண்டர்கள் பலத்தை காட்டுவேன் என்றார்.. மதுரை, திருவாரூர் என ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்... கட்சியில் சேர்க்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.. கலைஞரின் மகன் சொன்னதை செய்வேன் என்றார்!!
ஓய்ந்தே போய்விட்டார்
கருப்பு சட்டை அணிந்து அமைதி ஊர்வலம் நடத்தினார்... மீண்டும் என்னை கட்சிக்குள் சேர்த்து கொள்ளுமாறு கெஞ்சாத குறையாக கடைசியாக கேட்டு பார்த்து விட்டு ஓய்ந்தே போய்விட்டார் அழகிரி! இத்தனையையும் ஒரு கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாமலேயே செய்து காட்டினார். இதெல்லாம் போதாதென்று அழகிரியின் மகனும் தந்தைக்கு ஆதரவாக பேச வேண்டும் என்று களத்தில் இறங்கி சில அரசியல் தலைவர்களையும் விமர்சனம் செய்தார்.
ஜாதிய ஓட்டுக்கள்
ஆனால் எதற்குமே திமுக தலைமை மசியவும் இல்லை, ஒரு பொருட்டாக இந்த விவகாரத்தை ஆரம்பத்திலிருந்தே எடுத்து கொள்ளவில்லை. ஆனால் அழகிரி விவகாரத்தில் அதிமுக தரப்பில் அவ்வப்போது ஆதரவு வார்த்தைகள் பேசப்பட்டன. ஒரு அமைச்சர் வீட்டுக்கு அழகிரியே நேரில் சென்று பேசிவிட்டு கூட வந்தார். 2 தொகுதி இடைத்தேர்தலில் அழகிரி தனித்து நிற்க போகிறார் என்றும் பேச்சு எழுந்தது. தனது மனைவியின் ஜாதிய ஓட்டுகள் ஒருபுறம், கருணாநிதியின் மரணத்தினால் வரும் அனுதாபம் மறுபுறம் என்று வைத்துக் கொண்டு தேர்தலுக்கு தயார் ஆகிறார் என்றுகூட கூறப்பட்டது.
ஆதரவாளர்கள் வருத்தம்
ஆனால் இடைத்தேர்தல் தள்ளி வைப்பு என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு முன்னிருந்தே அழகிரி பற்றின பேச்சு மூச்சை காணோம். 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு வெளிவந்த உடனேயே செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தினாலும் அதை திமுக சந்திக்க எந்நேரமும் தயாராகவே இருப்பதாக கூறினார். ஆனால் அப்போதுகூட அழகிரி எந்தவிதமான கருத்தையும், பேட்டியும் தரவில்லை. இதனால் அழகிரியின் ஆதரவாளர்கள் ரொம்பவே வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
பெருத்த மௌனம்
எந்த தொண்டரிடத்திலும் இயல்பாக மனம் விட்டு அன்புடன் நடந்து கொள்ளும் சுபாவத்தை உடைய அழகிரிக்கென்றே ஒரு தனி கூட்டம் உள்ளது. அழகிரியின் பெருத்த மௌனம் அவர்களை அதிகமாகவே கவலை கொள்ள செய்துள்ளது. தன் நிலைப்பாட்டை அழகிரி தெரிவிப்பாரா? வரப்போகிற 20 இடைத்தேர்தலிலும் ஆதரவாளர்களை திரட்டி போட்டியிடுவாரா? அல்லது அப்போதும் இப்படியேதான் அமைதியாக ஒதுங்கியே இருப்பாரா? என்பது தெரியவில்லை. அஞ்சாநெஞ்சன் என்ன செய்ய போகிறார் என்பதை அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பொறுத்திருந்து பார்ப்போம்!!