உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி.. சூர்யகாந்தை நியமிக்க பரிந்துரை.. யார் இவர்? பின்னணி
டெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்தை நியமனம் செய்ய, தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரை செய்துள்ளார். நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாகும் சூர்யகாந்த் யார்? என்பது குறித்த விவரங்களையும் அவர் விசாரித்த முக்கியமான வழக்குகள் என்னவெல்லாம் என்பது பற்றிய விவரங்களையும் பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் பி.ஆர். கவாய், அடுத்த மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனால், நாட்டின் 53வது புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் வேகம் எடுத்துள்ளது. புதிய தலைமை நீதிபதியை தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி பரிந்துரை செய்வது வழக்கம்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
இதன்படி, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்க்கு சட்ட அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியை அடுத்த தலைமை நீதிபதி பதவிக்கு தலைமை நீதிபதி பரிந்துரை செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது மிக மூத்த நீதிபதியான சூர்யகாந்தை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு சட்ட அமைச்சகத்துக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பரிந்துரைத்துள்ளார்.
யார் இவர்?
சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யகாந்த் நவம்பர் 24ஆம் தேதி பதவி ஏற்பார். இவரது பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதிவரை உள்ளது. நீதிபதி சூர்யகாந்த், 1962ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் தேதி ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் பிறந்தார்.
எளிய பின்னணியை கொண்ட சூர்யகாந்த் 1981ஆம் ஆண்டு முதுகலை பட்டம் முடித்தார். அதன்பிறகு ரோஹ்தக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். ஹிசார் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார். கடந்த 1985ஆம் ஆண்டு சண்டிகருக்கு குடிபெயர்ந்த சூர்யகாந்த், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்
அரசியலமைப்பு, சிவில் வழக்குகளில் வாதாடுவதில் திறன் பெற்றவர் என்று பெயர் பெற்ற சூர்யகாந்த், 2008ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் அட்வகேட் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்டார். 2018ஆம் ஆண்டு, இமாசல பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2019ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார்.
உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற முறையில், காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கம், பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், பெகாசஸ் உளவு மென்பொருள், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக சிறுபான்மை அந்தஸ்து, பேச்சு சுதந்திரம், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து தீர்ப்பு அளித்துள்ளார்.
மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு காலக்கெடு விதித்த உத்தரவு குறித்து குடியரசுத்தலைவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பான வழக்கையும் விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications