வள்ளியூரில் கருணாநிதி சிலை நிறுவ அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சந்தை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி கோரி மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவானது அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைவர் புகழை பரப்புவதற்காக நிறுவப்படும் சிலை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் தடைவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வள்ளியூரிலன் காய்கறி சந்தையின் நுழைவுவாயிலுக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கலச் சந்தை மற்றும் பெயர்ப் பலகை நிறுவுவதற்கு வள்ளியூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
கருணாநிதியின் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி மறுத்தது. அதோடு மட்டுமல்லாமல் பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வள்ளியூர் சந்தை அருகில் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கவும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இருந்தார். சிலை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத் துறை, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைவரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், மனுதரார் தொடர்ந்த வழக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள், ஒரு தலைவர் புகழை பரப்புவதற்காக நிறுவப்படும் சிலை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வில்சன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கருணாநிதியின் சிலை அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தும், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications