அங்கித் திவாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.. 110 நாட்களுக்குப் பிறகு விடுவிப்பு!
டெல்லி: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் நீதிமன்றம், ஐகோர்ட் கிளை ஆகியவை ஜாமீன் மறுத்த நிலையில் சுப்ரீம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்த வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ. 20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தனர். அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அங்கித் திவாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள் திண்டுக்கல் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற கிளையில் ஏற்கனவே தள்ளுபடியானது.

அங்கித் திவாரி உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார். அதில், 'கைது செய்யப்பட்டு 99 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருகிறேன். இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீண்ட நாள் சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் நிபந்தனைகளை பின்பற்றுவேன்’ எனத் தெரிவித்திருந்தார்.
அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது எனக் குறிப்பிட்டார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்திலேயே நிவாரணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறி அங்கித் திவாரியின் ஜாமீன் தொடர்பான சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது ஐகோர்ட் கிளை.
மேலும், சட்டவிரோத செயல்களை தடுக்க வேண்டிய அமலாக்கத் துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளதை சகித்துக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிரமானது. விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் லஞ்சம் பெறும் குற்றச்சாட்டுகளில் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள ஊழலை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இடைக்கால ஜாமின் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தை அடுத்து உச்ச நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை அங்கித் திவாரி வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது என தமிழக அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.
அமலாக்கத்துறையிலேயே லஞ்சம்.. பொறுக்கவே முடியாது.. அங்கித் திவாரி வழக்கில் வெளுத்து வாங்கிய ஐகோர்ட்!
இந்நிலையில், இன்று உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநில அரசு அனுமதி இன்றி வெளியூர் செல்லக் கூடாது. விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வழக்கு சாட்சியங்களை கலைக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அங்கித் திவாரி வழக்கு குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். இதையடுத்து, மூன்றரை மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வர உள்ளார் அங்கித் திவாரி.












Click it and Unblock the Notifications