10 ஆண்டுகளுக்கு முன்பு உரக்க கூறிய சுப்ரீம் கோர்ட்.. இதை செய்திருந்தால் சுஜித் இருந்திருப்பான்!
Recommended Video
சென்னை: போர்வெல்லில் குழந்தைகள் சிக்கி உயிரிழப்பதை தடுக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் சில வழிவகைகளை வகுத்து அவற்றை பின்பற்ற உத்தரவிட்டிருந்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கேஜி பாலகிருஷ்ணனுக்கு போர்வெல்லில் குழந்தைகள் விழுந்து உயிரிழக்கும் சம்பவம் குறித்து ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு கடந்த 2010-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வை தானாக முன் வந்து அமைத்தார்.
அதில் தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள் பி எஸ் சவுகான், சிகே பிரசாத் ஆகியோர் இருந்தனர். இந்த 3 பேரும் போர்வெல் அமைப்பதில் பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்து அவற்றை அனைத்து மாநில அரசுகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
என்னோட மெஷின் பெரியது.. சுஜித் விழுந்த குழி குறுகலானது.. வருத்தமாக இருக்கிறது.. மதுரை மணிகண்டன்
அந்த நடைமுறைகளை அனைத்து மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கும் நகலெடுத்து அனுப்பினர். அதுமட்டுமல்லாமல் அந்த நடைமுறைகள் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டன. கடந்த 2010-இல் மே மாதம் பாலகிருஷ்ணன் ஓய்வடைந்த பிறகு, தலைமை நீதிபதி எஸ் எச் கபாடியா, நீதிபதிகள் கே எஸ் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் அமர்வு ஏற்கெனவே இயற்றப்பட்ட வழிவகைகளில் ஆகஸ்ட் மாதத்தில் சில மாற்றங்களை செய்தனர்.
சுப்ரீம் கோர்ட் இயற்றிய வழிமுறைகள் இதோ...
- போர்வெல் அமைக்க வேண்டும் என்றால் நிலத்தின் உரிமையாளர் 15 நாட்களுக்கு முன்பே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- போர்வெல் போடும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்திடமோ அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரியிடமோ பதிவு செய்து முறையாக அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
- போர்வெல் போடும் இடத்தில் போர்வெல் போடும் உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் தகவல்கள் அடங்கிய பலகை வைத்திருக்க வேண்டும்.
- டிரில்லிங் செய்யும் போது அந்த இடத்தை சுற்றி வேலிகளும் தடுப்புகளும் வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும்.
- போர்வெல் பணிகள் முடிவடைந்தவுடன் ஆழ்துளை கிணறுகளை போல்ட் நெட்டுகள் கொண்டு மூட வேண்டும். பயன்படாத ஆழ்துளை கிணறுகளில் மணல், களிமண், கூழாங்கற்கள் ஆகியவற்றை கொட்ட வேண்டும்.
- சுப்ரீம் கோர்ட் வகுத்த வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் சோதனை செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறுகளின் நிலை, டியூப்வெல்கள் தோண்டியது, எத்தனை கிணறுகள் பயன்பாட்டில் உள்ளது, எத்தனை பயன்படுத்தப்படாமல் உள்ளது, திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் எத்தனை, சரிவர மூடப்படாத கிணறுகளின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து மாவட்ட, தாலுக்கா, கிராம அளவில் தகவல்களை பராமரிக்க வேண்டும்.
- ஊரக பகுதிகளில் மேற்கண்டவை கிராம தலைவர் மற்றும் விவசாயத் துறையின் நிர்வாகி கண்காணிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் இளநிலை உதவியாளர் மற்றும் நிலத்தடி, பொது சுகாதாரம், மாநகராட்சியை சேர்ந்த நிர்வாகி கண்காணிக்க வேண்டும்.
- கைவிடப்பட்ட கிணறுகள் உள்ள இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரோ ஊரக வளர்ச்சி அலுவலரோ பராமரிக்க வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் ஆணையாகும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு விதிக்கப்பட்ட இந்த வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் சுஜித் இறந்திருக்க மாட்டான் என்பதே உண்மை. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை, இனியாவது இந்த வழிமுறைகளை பின்பற்றி மேலும் உயிரிழப்புகள் நேராமல் இருக்க வழிவகை செய்வோம்.