சுப்ரீம் கோர்ட்டில் அடுத்தடுத்து வரும் முக்கிய கேஸ்கள்! உற்சாகத்தில் ஓபிஎஸ்.. எடப்பாடிக்கு சிக்கல்?
சென்னை: அதிமுகவில் எடப்பாடி கை ஓங்கி இருப்பது போலத் தெரியும் நிலையில், அடுத்து வரும் நாட்கள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை அதிமுக என்பது அவரை சுற்றியே இருக்கும். அதிமுகவில் உட்கட்சி பூசல் எல்லாம் அப்போது நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் இது அப்படியே தலைகீழானது. அப்போது முதலே ஒன்றன்பின் ஒன்றாக அதிமுகவில் பல குழப்பங்கள் அரங்கேறி வருகிறது.

எடப்பாடி
கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோரின் இரட்டை தலைமையில் செயல்பட்டு வந்தது. இருப்பினும், கடந்த சில தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து இருந்தது. மேலும், தமிழகத்தில் எதிர்க்கட்சியைப் போல அதிமுக செயல்படவில்லை என்ற விமர்சனமும் அதிகரித்தது. இந்தச் சூழலில் தான், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். மேலும், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஓபிஎஸ்
அதேநேரம் மறுபுறம் ஓபிஎஸ் என்னவோ செய்து பார்த்தார். கட்சிக்காகப் பல முறை விட்டுக் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால்தான் துணை முதல்வராகப் பொறுப்பேற்க ஒப்புக் கொண்டேன் என்றும் வெளிப்படையாகவே கூறினார். மேலும், டெல்லி சென்றும் பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சரை அவர் சந்திக்க முயன்றார். இருப்பினும், அது கைகூடவில்லை.

சாவி & கணக்கு
முன்னதாக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது, ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் உடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சென்று சில ஆவணங்களை எடுத்துச் சென்றார். அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்குச் சீல் வைக்கப்பட்டது. இதனிடையே சீல் வைக்கப்பட்ட அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியும் அதிமுக கணக்கு வழக்குகளும் எடப்பாடி தரப்பிற்கு ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அதிமுக கணக்கு வழக்குகளும் எடப்பாடியிடம் ஒப்படைக்கப்பட்டது.
Recommended Video

அழுத்தம்
இப்படி அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் எடப்பாடியின் கை ஓங்கியது. இதனால் என்ன செய்வதென்று ஓபிஎஸ் சிந்தித்துக் கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் பன்னீர்செல்வத்திற்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. டெல்லி சென்ற எடப்பாடியால் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவையும் சந்திக்க முடியாததால் பாதியிலேலே பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். மேலும் குட்கா வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அனுமதி, ஓபிஎஸ் ஆதரவாக சசிகலா அறிக்கை ஆகியவை எடப்பாடியை டென்ஷனாக்கியது. இந்தச் சூழலில் எடப்பாடிக்கு எதிரான இரு முக்கிய வழக்குள் உச்ச நீதிமன்றத்தில் அடுத்தடுத்து விசாரணைக்கு வருவது அவரது தரப்புக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது.

டெண்டர் வழக்கு
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி 4800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக ஆர்.எஸ்.பாரதி 2018இல் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாகச் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளித்திருந்த நிலையில், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் சென்னை ஐகோர்ட் கூறியிருந்தது.

இன்று விசாரணை
இதற்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து. இந்த வழக்கை விரைவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் முறையீடு செய்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. ஊழல் புகாரில் சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடுமா அல்லது இடைக்காலத் தடை தொடருமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை சட்ட ரீதியாக மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

பொதுக்குழு வழக்கு
அதேபோல கடந்த ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் சட்ட விதிகள் மீறப்பட்டு இருந்ததாகத் தனது மனுவில் ஓபிஎஸ் கூறி இருந்தார். இந்தச் சூழலில் இந்த மேல்முறையீட்டு மனுவை வரும் ஜூலை 28ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு ஓபிஎஸ் மனுவை விசாரிக்க உள்ளது.

மிக முக்கியம்
அதிமுகவில் எடப்பாடியின் கை ஓங்கி இருந்தது போலத் தெரிந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இரு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்குகளில் நீதிமன்றம் அளிக்கும் உத்தரவுகளுக்குப் பின்னர், அதிமுகவில் மேலும் பல திருப்பங்கள் வரலாம். எனவே, டெல்லியில் அடுத்த வரும் நாட்களில் என்ன நடக்கும் எனக் கூர்ந்து நோக்குகிறது எடப்பாடி தரப்பு!












Click it and Unblock the Notifications