பாகுபலி..பாக்குறவன் பலி..! கங்குவாவை ரவுண்டு கட்டும் விமர்சனம்! கூடவே சேர்ந்த மதுரையன்ஸ்! என்னாச்சு?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பாமக, பாஜகவினர் படத்தை விமர்சித்து வரும் நிலையில் கூடவே மதுரைக்காரர்களும் இணைந்து விமர்சித்து வருகின்றனர். என்ன காரணம்? என விசாரித்த போது பழைய கதை ஒன்று கிடைத்தது..
ஓடிடியில் வெளியான ஜெய் பீம் தவிர்த்து சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பல திரைப்படங்கள் அட்டர் பிளாப்பு தான். ஒரு சில படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது. காப்பான், அஞ்சான், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் என பல படங்கள் சூர்யா ரசிகர்களையே சோதித்தது.

இந்த நிலையில் கமர்சியலாக வெற்றி பட டைரக்டர் ஆன சிறுத்தை சிவா உடன் சூர்யா இணைகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் இதுவரை தயாரான சூர்யாவின் படங்களிலேயே 300 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் கங்குவா படம் தயாராகிறது, அதுவும் பான் இந்தியா படமாக வருகிறது என்ற தகவல் அவர்களை குதூகலம் அடைய செய்தது.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதாணி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தனர். 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. படத்தில் லாஜிக்கலாக எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை, படத்தில் சத்தம் அதிகம் இருக்கிறது, காது கேட்கவில்லை, கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் வன்மத்தை கக்கி கொண்டே இருந்தனர்.
தற்போதைய தகவல் படி படம் இரண்டு நாட்களில் சுமார் 25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இரிட்டேட்டிக்காக இருந்தாலும், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவும், நிஷாத் யூசுபின் படத்தொகுப்பு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேண்டஸி திரைப்படம் குழந்தைகளுக்கும் குடும்பத்தில் இருக்கும் பிடிக்கும் என சில பாசிட்டிவ் விமர்சனங்கள் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ரஜினி, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பாமகவினரும், பாஜகவினரும் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெய் பீம் படத்தில் வில்லனின் பெயரை குரு என வைத்ததோடு, அவரது வீட்டில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் இருப்பது போன்ற காலண்டர் இடம் பெற்றது, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என சூர்யா பேசியதால் பாமகவினர் கொந்தளித்து படத்தை புறக்கணித்ததோடு இந்த சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் கோயில் தொடர்பாக சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பேசியது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அவர்களும் படத்துக்கு செலவழிக்கும் பணத்தை ஏழை குழந்தைகளுக்கு உதவலாம் என கூறி வருகின்றனர். இது போன்ற விவகாரங்கள் தனியே இருக்க மதுரைக்காரர்களும் படத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் எதுக்கு இந்த பஞ்சாயத்தில் சேர்ந்தார்கள் என விசாரித்த போது தான் பருத்திவீரன் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியது தான் பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
கார்த்தியை முதன்முதலாக ஹீரோவாக வைத்து அமீர் இறக்கிய பருத்திவீரன் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் கருத்து மோதல் வெடித்தது. ஞானவேல் ராஜா அமீரை மிகக் கடுமையாக பொது வெளியில் விமர்சித்தார். ஆனால் அமீர் எதுவுமே பேசவில்லை என்றாலும் இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் ஞானவேல் ராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். அமீர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஆதரவாளர்கள் ரசிகர்களும் ஞானவேல் ராஜாவை புரட்டி எடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது கங்குவா சேர்ந்து கொள்ள தங்கள் பங்குக்கு அந்த படத்தை விமர்சித்து வருகிறார்கள் மதுரைக்காரர்கள் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications