விஜய்க்கு எம்ஜிஆருனு நினைப்பு..மக்கள் வயிற்றில் அடித்த பணம்! பண்ணையார் மனநிலை.. விளாசும் சூர்யா சிவா
சென்னை: நடிகர் விஜய்க்கு தான் ஒரு எம்ஜிஆர் என்ற நினைப்பு இருப்பதாகவும், எம்ஜிஆர் அரசியல் களத்தில் 15 ஆண்டுகளாக இருந்த போது தனித்து கட்சி ஆரம்பித்தவர் எனவும், எம்ஜிஆருக்கு விஜய் ஈடு இல்லை என விமர்சித்துள்ளார் சூர்யா சிவா. மேலும் மக்கள் வயிற்றில் அடித்த பணத்தின் மூலம் அவர்கள் அரசியல் செய்வதாகவும் விமர்சித்திருக்கிறார்.
ஒன் இந்தியா தமிழ் அரசியல் சேனலுக்கு பேட்டி அளித்த அவர்," எம்ஜிஆர் என தன்னை விஜய் நினைத்துக் கொண்டிருக்கிறார். அண்ணா கட்சி ஆரம்பித்தபோது எம்ஜிஆர் அரசியலில் இருந்தார். அதே நேரத்தில் அண்ணாவின் கொள்கைகளை பாடல் வழியாகவும் உடைகள் வழியாகவும் எம்ஜிஆர் திரையில் கொண்டு வந்தார்.

அதனால் தான் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டனர். எம்ஜிஆரின் நடிப்பை விட அவரது உருவத்தை விட மக்களை அதிகம் கவர்ந்தது அவரது கொள்கைகள் தான், கருப்பு சிகப்பு உடை அணிந்து திமுகவின் கொள்கைகளை அவர் பாடல்கள் வழியாக மக்களிடம் கொண்டு சேர்த்தார், கட்சியின் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்டவர், களத்தில் நின்றவர் எம்ஜிஆர், ஒரு சூழலில் முரண்பட்டு கட்சியை விட்டு வெளியேறினார், ஆனால் அதற்கு முன்னர் ஒரு 15 வருடம் கட்சி அரசியலில், பொது வெளியில் எம்ஜிஆர் மக்களோடு மக்களாக கள அரசியல் செய்திருக்கிறார்.
விஜய் போல போன மாதம் வரை படத்தில் நடித்துவிட்டு இந்த மாதம் அரசியலுக்கு வரவில்லை. எல்லோரும் தன்னை அண்ணா என்று அழைப்பதால் தன்னையும் அண்ணா என நினைக்கிறார் விஜய். கருப்பு பணத்தில் சம்பளம் வாங்கிவிட்டு விஜய் ஊழல் எதிர்ப்பு என பேசுகிறார். அவருடன் இருப்பவர்கள் லாட்டரி சீட்டு மூலமும் நிறைய விஷயங்கள் மூலமும் முறைகேடாக சம்பாதித்தவர்கள். அவர்கள் செல்லும் கார்கள் எல்லாம் நான்கு கோடி ஐந்து கோடி விலை மதிப்புடையது. அவர்கள் எப்படி ஏழைகளுக்காக பேசுவார்கள்.
முதல்வர் ஸ்டாலின் மகன் என்பதால் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக கூடாது என்கிறார்கள். ஆனால் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மருமகன் என்பதால் தான் ஆதவ் அர்ஜுனாவை மற்ற கட்சிகள் கூட்டிக்கொண்டு செல்கிறது. உங்களிடம் பணம் இருக்கிறது. எங்கே எவர் வயிற்றில் அடித்து சம்பாதித்த பணம் என்பது அனைவருக்கும் தெரியும். விவசாயிகளுக்கு ஒன்று என்றால் நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும் என்கிறீர்கள். விவசாயியின் மகன் என ஆதவ் அர்ஜூனா பேசுகிறார். ஆனால் எத்தனை விவசாயிகள் வயிற்றில் அடித்து சம்பாதித்த பணம் அந்த பணம் என்று தெரியுமா?
ஆடியோ லான்ச் போல தான் கட்சியின் பொதுக்குழுவையும் விஜய் நடத்தினார். 5 ஸ்டார் ஹோட்டலிற்கு நிகராக அந்த மண்டபம் இருந்தது. அங்கு சாப்பிட்ட ஒவ்வொரு இலைக்கும் 3000 ரூபாய் ஜிஎஸ்டியோடு சேர்த்து போட்டது. இவர்கள் எப்படி மக்களுக்கான அரசியல் செய்வார்கள். நாங்கள் பண்ணையார் இல்லை மக்களுக்கான கட்சி என்கிறீர்கள். ஆனால் ஒரு சாப்பாட்டு இலைக்கு மட்டும் 3 ஆயிரம் ரூபாய் எப்படி செலவு செய்ய முடிந்தது.
மக்களை சந்திக்க விஜய் பயப்படுகிறார். அவர் உடன் இருக்கும் நிர்வாகிகளையே விஜயால் சந்திக்க முடியவில்லை. அவர்களையே தூரத்தில் வைத்து தான் விஜய் பார்க்கிறார் என்றால் அவர் எப்படி மக்களுக்கான அரசியல் செய்வார். உங்களை சுற்றி இருக்கும் உங்களுக்காக களத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கு அருகில் செல்லவே பயப்படும் நீங்கள் எப்படி மக்களை தேடி செல்வீர்கள்" என கேட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications