சென்னை, திருப்பூரில் என்ஐஏ ரெய்டு.. வங்கதேசத்தை சேர்ந்த மூவர் கைது.. போலி ஆதார் அட்டைகள் பறிமுதல்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 6க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதையடுத்து சோதனை நடத்திய அதிகாரிகள் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலியான ஆதார் அடையாள அட்டை வைத்திருந்த வங்கதேசத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளிக்கு முன்பாக 23ஆம் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கார் குண்டு வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அவ்வப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் சோதனை நடத்தப்படுகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களாகவே பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு முழுவதும் கோவை, நெல்லை பகுதிகளில் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துவது வழக்கமான ஒன்றாகும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் NIA அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள கருநீலம் பகுதியில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதியிலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். சோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில், இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மறைமலைநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் நபரின் செல்போன் பேச்சுக்கள் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த தாம்பரம், பள்ளிக்கரணை, படப்பை, கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் படப்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த சகாபுதீன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். சகாபுதீன் கடந்த 2 மாதங்களாக படப்பையில் தங்கியிருந்த நிலையில் என்ஐஏ அதிகாரிகள் அவரது குடியிருப்பில் சோதனை நடத்தினர். அவரது நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்ததை அடுத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சகாபுதீனிடம் இருந்து போலி ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதே போல மறைமறை நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த முன்னா மற்றும் அவருடன் தங்கியிருந்தவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 3 பேருமே வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் திரிபுராவை சேர்ந்தவர்கள் என போலி ஆதார் அட்டை தயார் செய்து சென்னையில் தங்கி வேலை செய்து வந்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி ஆதார் அட்டை தயாரித்து கொடுத்து அவர்களுக்கு வேலை கொடுத்த சாகித் உஷேன் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதே போல திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல புதுச்சேரியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications